திமுக கூட்டணி தொகுதி பட்டியல் வெளியாவதில் தாமதம்.. காங்., தேமுதிக விருப்ப இடங்களை கேட்டு பிடிவாதம்!!
Tamilnadu assembly elections: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரையில் தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு தங்களுக்கு ஒரு தொகுதியை குறைத்து வழங்கியதால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். எனவே தொகுதி பட்டியலில் திமுகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் அக்கட்சி முனைப்பு காட்டுகிறது.
Tamilnadu polls 2026: திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் விருப்ப இடங்களை கேட்டு பிடிவாதம் பிடித்து வருவதால் தொகுதி பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியாவதாக இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி தொகுத பட்டியல் வெளியிடப்படவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 21 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பல நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் அது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிக்க: பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடத்தில் திடீரென பள்ளம் வந்தது எப்படி? விஜய் பரபரப்பு கேள்வி
தொகுதி பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி:
காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 3 கட்சிகளுடன் மட்டும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28-ல் 23 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஸ்ரீவைகுண்டம், கிள்ளியூர் ஆகிய 2 தொகுதிகளில் இந்த முறை திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த 2 தொகுதிகளை விட்டு தர முடியாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. இதுதான் காங்கிரஸுடனான தொகுதி பட்டியலை இறுதி செய்வதில் இழுபறியாக அமைந்துள்ளது.




பிடிவாதம் காட்டும் பிரேமலதா:
தேமுதிகவை பொறுத்தவரையில் விஜயகாந்துக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று தந்த ‘ரிஷிவந்தியம்’ தொகுதியை விருப்ப பட்டியலில் பிரேமலதா பிரதானமாக அளித்துள்ளார். தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். எனவே அவருக்காக விருத்தாசலம் தொகுதியையும், தான் பிறந்த ஊரான ஆம்பூர் தொகுதியையும் பெற்றுவிட வேண்டும் என்பதில் பிரேமலதா பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் இந்த 3 தொகுதிகளும் திமுகவுக்கு பலம் வாய்ந்தவை என்பதால், விட்டு கொடுக்க திமுக தயக்கம் காட்டி வருகிறது.
செல்வாக்கு உள்ள தொகுதி கேட்கும் ம.கம்யூ:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரையில் தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு தங்களுக்கு ஒரு தொகுதியை குறைத்து வழங்கியதால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். எனவே தொகுதி பட்டியலில் திமுகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை பெற்றுவிட வேண்டும் என்பதில் அக் கட்சி குழு முனைப்பு காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க: பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடத்தில் திடீரென பள்ளம் வந்தது எப்படி? விஜய் பரபரப்பு கேள்வி
வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்பு:
இந்த 3 காரணங்கள்தான் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை இறுதி செய்வதில் தாமதமாக அமைந்துள்ளது. அனைத்து கட்சிகளுடன் சுமூக உடன்பாடு ஏற்பட்டு விடும் என்று திமுக நம்பிக்கையுடன் இருந்தது. அதன்படி திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் அண்ணா அறிவாலயத்தில் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த 3 கட்சிகளுடன் உடன்பாடு ஒப்பந்தம் முடிவடையாததால் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முடிவை திமுக நேற்று கைவிட்டது. அநேகமாக இன்று சுமூக உடன்பாடு எட்டப்பட்டு, திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.