“அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா?”.. டெல்லியில் டிடிவி தினகரன் பேட்டி!!
Tamil Nadu Assembly Election: எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லி செல்வதை 'தமிழ்நாடு Vs டெல்லி' என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சிப்பது குறித்துக் கேட்டபோது, "தேர்தல் நேரத்தில் கூட்டணித் தலைவர்களைச் சந்திப்பது ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒன்று. இதை விமர்சிப்பது முதலமைச்சரின் பயத்தையே காட்டுகிறது என்று அவர் கூறினார்.
Tamil Nadu Polls 2026: என்டிஏ கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை, எங்கள் கூட்டணி முழுமை பெற்றுவிட்டது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி வியூகம் குறித்துப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிக்க: புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி.. முழு விவரம் இதோ!
4 நாட்களில் தொகுதிப் பங்கீடு:
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாகவும், சுமூகமாகவும் அமைந்ததாகத் தினகரன் தெரிவித்தார். “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் விரிவாக விவாதித்தோம்,” என்று அவர் கூறினார். தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் இறுதி நிலையை எட்டிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், இன்னும் நான்கு நாட்களுக்குள் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று உறுதியளித்தார். இதற்காக பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் விரைவில் சென்னை வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




தமிழ்நாடு Vs டெல்லி விமர்சனம்:
எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லி செல்வதை ‘தமிழ்நாடு Vs டெல்லி’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சிப்பது குறித்துக் கேட்டபோது, “தேர்தல் நேரத்தில் கூட்டணித் தலைவர்களைச் சந்திப்பது ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒன்று. இதை விமர்சிப்பது முதலமைச்சரின் பயத்தையே காட்டுகிறது. திமுக ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அந்த மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் இத்தகைய தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்கின்றனர்,” என்று காட்டமாகப் பதிலளித்தார்.
இதையும் படிக்க: பெரம்பூர் தொகுதியில் களமிறங்கும் விஜய்… கை கொடுக்குமா? காலை வாருமா? கள நிலவரம் கூறுவதென்ன!
எப்படி சாத்தியமாகும்?:
எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் டெல்லி வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான இந்த மெகா கூட்டணி திமுகவை வீழ்த்தும் ஒரு பலமான சக்தியாக உருவெடுத்துள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, அனைவரும் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்? என்பது குறித்து கேள்வி எழுப்பியபோது, கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிற்கு வர முடியுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், அதனால் தான் நாங்கள் டெல்லி வருகிறோம் என்று விளக்கமளித்தார்.