AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இறுதி கட்டத்தை எட்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. அதிமுக – 162 இடங்கள், பாஜக – 31 இடங்கள்? பிற கட்சிகளுக்கு எத்தனை தொகுதி?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 21, 2026 அன்று தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழகத்திற்கு வருகிறார். அவர் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேயான பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி கட்டத்தை எட்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. அதிமுக – 162 இடங்கள், பாஜக – 31 இடங்கள்? பிற கட்சிகளுக்கு எத்தனை தொகுதி?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 20 Mar 2026 15:12 PM IST

மார்ச் 20, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழலில், அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணியை எடுத்துக்கொண்டால், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மொத்தம் 21 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, அன்புமணி தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, பார்வேர்ட் பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் பெரிய திருப்பம்… திடீரென வெளியேறிய முக்கிய கட்சி.. முழு விவரம் என்ன!

தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு:

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இதுவரை இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறியாக நீடித்து வருகிறது.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், 234 தொகுதிகளில் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது. பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதல் இடங்களை பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதனால், கடந்த முறை அளிக்கப்பட்ட தொகுதிகளை விட இரட்டிப்பு அளவில், சுமார் 40 தொகுதிகள் வரை பாஜக கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: “10+1 சீட்கள் கேட்டு விசிக பிடிவாதம்”.. இறங்கி வருமா திமுக?.. கூட்டணி பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி..

நாளை இறுதி முடிவு எட்டப்படும்:

இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 21, 2026 அன்று தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழகத்திற்கு வருகிறார். அவர் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேயான பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே திருச்சி மற்றும் மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டங்களைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், அப்போது சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், மீண்டும் டெல்லி பயணம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜகவிற்கு 31 இடங்கள் ஒதுக்கீடு?

மேலும், மார்ச் 20, 2026 அன்று அன்புமணி மற்றும் டிடிவி தினகரன் இருவரும் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சுமார் 162 தொகுதிகளில் போட்டியிடும் எனவும், பாஜகவிற்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்புமணி தரப்பு பாமகக்கு 17 இடங்களும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 9 இடங்களும் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், பாஜக 31 தொகுதிகளில் போட்டியிட்டாலும், தாமரை சின்னத்தில் மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பார்வேர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

40 இடங்களில் தாமரை சின்னம்:

இதன்படி, இரட்டை இலை சின்னத்தில் 162 தொகுதிகளிலும், தாமரை சின்னத்தில் சுமார் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. எதுவாயினும், நாளை பியூஷ் கோயல் தமிழகத்திற்கு வர உள்ள நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி, விரைவில் சுமூகமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us