75 ஆண்டுகால சாதனையை முறியடித்த தமிழகம்.. சட்டமன்றத் தேர்தலில் 85.15% வாக்குப்பதிவு..
Tamil Nadu Election 2026 Voting Updates: தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 84% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆர்.கே.நகர் தொகுதி 91 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் 90% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மயிலாப்பூரில் மிகக் குறைவாக 75 சதவீதமும், சைதாப்பேட்டையில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, 85.15% வாக்குகள் பதிவாகி புதிய வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் இந்தத் தேர்தலில் தங்களது ஜனநாயகக் கடமையை அதிக ஆர்வத்துடன் நிறைவேற்றியுள்ளனர். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1952-ம் ஆண்டு சென்னை மாகாணமாக இருந்தபோது நடந்த தேர்தலில் 54.75% வாக்குகள் பதிவாகின. பின்னர், 1971-ல் தமிழ்நாடு சட்டப்பேரவையாகப் பெயர் மாற்றப்பட்ட பிறகு 70.65% வாக்குகள் பதிவாகின.
இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குகளே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த 13 ஆண்டுகால சாதனையைத் தகர்த்து 85.15% வாக்குப்பதிவு என்ற புதிய மைல்கல்லை தமிழகம் எட்டியுள்ளது.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர்களின் தொகுதி – எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன?
மாவட்ட வாரியான வாக்குப்பதிவு நிலவரம்:
வாக்குப்பதிவில் மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, சில மாவட்டங்கள் 90 சதவீதத்தைத் தாண்டி அசத்தியுள்ளன. அதிகபட்சமாக கரூர் மாவட்டம் 93 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சேலம் 91 சதவீதம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகக் குறைவாக 76% வாக்குகள் பதிவாகியுள்ளன. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 77% வாக்குகளும், திருநெல்வேலியில் 78% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தொகுதி வாரியான முக்கியப் புள்ளிவிவரங்கள்:
சட்டமன்றத் தொகுதிகளில் வீரபாண்டி தொகுதி 93.40 சதவீத வாக்குப்பதிவுடன் மாநிலத்திலேயே முதலிடம் வகிக்கிறது. குமாரபாளையம், குளித்தலை, பாலக்கோடு ஆகிய தொகுதிகளில் தலா 93% வாக்குகளும், கிருஷ்ணராயபுரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் தலா 92% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மிகக்குறைந்த வாக்குப்பதிவாக பாளையங்கோட்டை தொகுதியில் 69% பதிவாகியுள்ளது. கிள்ளியூரில் 71%, மதுரை வடக்கில் 73%, காரைக்குடி மற்றும் மதுரை மத்திய தொகுதிகளில் தலா 74% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை மாவட்ட நிலவரம்:
தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஒட்டுமொத்தமாக 84% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆர்.கே.நகர் தொகுதி 91 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் 90% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மயிலாப்பூரில் மிகக் குறைவாக 75 சதவீதமும், சைதாப்பேட்டையில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்தச் சாதனைக்குக் காரணம் என்ன?
இந்த இமாலய வாக்குப்பதிவு சாதனைக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு (SIR) தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தீவிர சரிபார்ப்புப் பணியின் மூலம் முறையற்ற 74.72 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனால் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாகக் குறைந்தது.
மேலும் படிக்க : வாக்குச்சாவடியில் உச்சக்கட்ட பரபரப்பு.. தலைமை காவலருக்கு கத்திக்குத்து.. முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!
இரண்டாவதாக இளைஞர்களின் ஆர்வம், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றியது இந்த வரலாற்றுச் சாதனைக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் இந்த உயரிய வாக்குப்பதிவு சதவீதம் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.