சட்டமன்ற தேர்தல் 2026 : டாஸ்மாக் கடைகளுக்கு 3 முக்கிய கட்டுப்பாடுகள் – டோக்கன் மூலம் மதுபானம் விற்க தடை
Strict rules for TASMAC : தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் தேர்தல் ஆணையம் 3 முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. வருகற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையமும் டாஸ்மாக் நிர்வாகமும் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மார்ச் 15, 2026 அன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர அதிக அளவில் மதுபானங்களை வாங்குவதை தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதற்காக கண்காணிப்பு குழுக்கள் மாநிலம் முழுவதும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க : இருமுறை வெற்றி வாய்ப்பு… திருவெறும்பூர் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவாரா அன்பில் மகேஷ் பொய்யாமொழி!




முக்கிய 3 கட்டுப்பாடுகள்
டாஸ்மாக் நிர்வாகம், மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு 3 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது
- அதன்படி அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வழங்கும் டோக்கன் அல்லது கூப்பன் மூலம் எந்த சூழலிலும் மதுபானம் விற்கக்கூடாது.
- கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ஸ்டாக்கின் 50 சதவிகிதம் அளவுக்கு மேல் எந்த கடையிலும் மதுபானம் சேமித்து வைக்க அனுமதி இல்லை.
- இந்த மாத விற்பனை, கடந்த ஆண்டில் இதே மாதம் செய்யப்பட்ட விற்பனையை விட 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது.
இந்த விதிகளை மீறி விற்பனை நடந்தால், அது தேர்தல் முறைகேடாக கருதப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மீது கூடுதல் கண்காணிப்பு
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 4,800 டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனை மற்றும் ஸ்டாக் விவரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அரசு நிர்ணயித்த அளவை விட 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக ஸ்டாக் வைத்திருப்பது குற்றமாக கருதப்படும். அதே போல ஒருவருக்கு அதிக அளவில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதும் குற்றமாக கருதப்படும். தேர்தல் நேரங்களில் பணம் அல்லது மதுபானங்களை வழங்கி வாக்கு சேகரிப்பது சட்ட விரோதம் என்பதால், அதனை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிக்க : தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை பயன்படுத்திய தவெக? – தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு
டாஸ்மாக் பார்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடு
மேலும் டாஸ்மாக் பார்களுக்கும் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக திறக்கவும், இரவு 10 மணிக்கு பிறகு செயல்படவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் பார்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் டெப்பாசிட் செய்த தொகையும் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறது. கடைகளுக்கு நிர்ணயிக்கபபட்ட விற்பனை அளவை மீறி மதுபானம் விற்கப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.