“அதிமுகவை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள்!”.. இபிஎஸ், ஆர்.பி.உதயகுமார் மீது ஓபிஎஸ் கடும் தாக்கு..
Tamil Nadu Assembly Election: அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தென் மாவட்டங்களிலேயே கட்சி கடும் சரிவைச் சந்தித்துள்ளதாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட இடங்களில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்ததோடு, 14 இடங்களில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
Tamil Nadu Polls 2026: விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், 75 ஆண்டு கால திராவிட பாரம்பரியம் கொண்ட இயக்கமாகவும், தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆலமரம் போன்றும் திமுக வளர்ந்து வருவதாகப் பாராட்டினார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அந்த திமுகவில் இணைந்திருப்பதை ஒரு வரலாற்று நிகழ்வாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: “அமித்ஷா ஒவ்வொரு முறையும் தமிழகம் வர முடியுமா?”.. டெல்லியில் டிடிவி தினகரன் பேட்டி!!
அதிமுகவில் சட்ட விதிமீறல்:
தொடர்ந்து, அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் அக்கட்சி சந்தித்து வரும் வீழ்ச்சி குறித்து பேசினார். அப்போது, எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிப்படி, அதிமுகவின் பொதுச்செயலாளரை அடிப்படைத் தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அந்த விதியைத் திருத்தி, தன்னைத் தானே பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார். “பொதுச்செயலாளர் பதவிக்குத் போட்டியிடுபவரை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் மற்றும் அவர் 5 ஆண்டுகள் தலைமைக் கழக நிர்வாகியாக இருக்க வேண்டும்” என்ற புதிய நிபந்தனைகளை இபிஎஸ் உருவாக்கியுள்ளார். இது சாதாரணத் தொண்டர்கள் யாரும் அந்தப் பதவிக்கு வர முடியாதபடி தடையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.




ராமநாதபுரம் தேர்தல் சதி:
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் தன்னைத் தோற்கடிக்க ஆர்.பி. உதயகுமார் மூலம் ஆறு ‘பன்னீர்செல்வம்’கள் சுயேச்சையாகக் களமிறக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், வாக்காளர்கள் குழப்பமடைந்து தனக்கு விழ வேண்டிய வாக்குகள் சிதற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ‘பெயர் பொருத்தம்’ செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
அதிமுகவுக்கு தேர்தலில் பின்னடைவு:
அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தென் மாவட்டங்களிலேயே கட்சி கடும் சரிவைச் சந்தித்துள்ளதாகவும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட இடங்களில் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்ததோடு, 14 இடங்களில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் உள்ள நிலையில், இரட்டை இலைச் சின்னம் வெறும் 5,000 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது அக்கட்சியின் தற்போதைய அவலநிலையைக் காட்டுகிறது என்றார்.
இதையும் படிக்க: புதுச்சேரி பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி.. முழு விவரம் இதோ!
இபிஎஸ் மீது கடும் விமர்சனம்:
எடப்பாடி பழனிசாமி தற்போது “கிறுக்குப் பிடித்தது போலவும், பேய் பிடித்தது போலவும்” அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதாக விமர்சித்த அவர், கட்சியைக் கட்டிக்காத்த ஜெயலலிதா அவர்களுக்கு இபிஎஸ் தரப்பு எவ்வித மரியாதையும் அளிப்பதில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமி மம்பட்டியுடனும், ஆர்.பி. உதயகுமார் கடப்பரையுடனும் வந்து அதிமுக எனும் பேரியக்கத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள்” என்று அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.