விஜய்-அருண்ராஜ் படம் ஒட்டிய சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்… வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்ததா? தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
Silver Utensils Seized: நாமக்கல் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஸ்டிக்கர் ஓட்டப்பட்ட 250-க்கும் மேற்பட்ட சில்வர் பாத்திரங்கள் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் திமுகவினர் சார்பில் வழங்கப்பட்ட சில்வர் பாத்திரங்கள் மற்றும் சேலைகள் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு கட்சிகள் சார்பில் பணம், பரிசு பொருள், மது பாட்டில்கள் உள்ளிட்டவை வழங்குவது குற்றமாகும். தேர்தலில் தங்களது கட்சிகளுக்கான வாக்குகளை பெறுவதற்கு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் அரசியல் கட்சிகள் சார்பில் பணம் மற்றும் பரிசு பொருள்கள் ஆகியவை வழங்கப்படுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகும். இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக சில்வர் பாத்திரங்கள் வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேர்தல் அலுவலரான ஆர். டி. ஓ. லெனின் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட குடியிருப்புக்கு சென்றனர்.
தவெக தலைவர் விஜய்-அருண்ராஜ் படம் ஒட்டப்பட்ட பாத்திரங்கள்
அங்கு, அரசு அங்கீகாரம் பெற்ற தையல் பயற்சி பள்ளியில் ஏராளமான செல்வர் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த சில்வர் பாத்திரங்களில் தமிழக வெற்றி கழகத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த ஸ்டிக்கரில் தவெக தலைவர் விஜய், கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண் ராஜ், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர்களது படமும், கட்சியின் விசில் சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும், டாக்டர் கே. ஜி. அருள்ராஜ் முன்னாள் ஐஆர்எஸ், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி என்ற எழுத்தும் பொறிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: கரூர் சம்பவத்தில் காட்டிய வேகம் ஏன விளாத்திகுளம் சம்பவத்தில் காட்டவில்லை – அண்ணாமலை கேள்வி..




250 சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்
இதில், சுமார் 250- க்கும் மேற்பட்ட சில்வர் பாத்திரங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர்களான எச்சிபாளையம் வட்டார வேளாண் உதவி அலுவலர் நிஷாந்த் தலைமையிலான அலுவலர்கள் அந்த சில்வர் பாத்திரங்களை பறிமுதல் செய்தனர். அவற்றை தங்களது அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தேர்தல் பறக்கும் படை அலுவலர் நிஷாந்த் அளித்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் மாதேஸ்வரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுகவினர் வீட்டில் இருந்து சில்வர் பாத்திரம்-சேலைகள் பறிமுதல்
இதே போல, அரியலூர் மாவட்டம், கரடி குளம் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு சில்வர் பாத்திரங்கள் வழங்குவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், திமுக வார்டு செயலாளர் மணிவண்ணன் மற்றும் அழகன் ஆகியோர் பெண்களுக்கு சில்வர் பாத்திரங்களை வழங்கி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து 4 மூட்டைகளில் 279 சில்வர் பாத்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே போல, செங்குந்தபுரத்தில் திமுக நகர அவை தலைவர் ஞானபிரகாசம் வீட்டில் இருந்து சில்வர் பாத்திரங்கள், சேலைகள் ஆகிவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க: கூட்டணி இழுபறி.. தேர்தல் அறிக்கையுடன், வேட்பாளர் பட்டியல்?.. விஜய் எடுத்த அதிரடி முடிவு!!