O.S. Manian Tamil Nadu Election: வேதாரண்யம் தொகுதியில் மீண்டும் கோலோச்சுவாரா ஓ.எஸ்.மணியன்!
Tamil Nadu Elections 2026: அதிமுக சார்பில் வேதாரண்யம் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் இரு முறை வெற்றி பெற்று எம்.எல். ஏ ஆனது போல, வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் ஓ. எஸ். மணியன் கோலோச்சுவாரா. களநிலவரம் அவருக்கு சாதகமாக உள்ளதா.
அதிமுகவில் முன்னாள் அமைச்சராகவும், தற்போதைய எம்எல்ஏவாகவும் இருந்து வருபவர் ஓ. எஸ். மணியன். இவர், கடந்த 1954- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29- ஆம் தேதி சோமுத தேவர்- காசாம்பு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இளமை காலத்தில் அரசியல் மீதான ஆர்வம் மற்றும் பொது நலத்தில் ஆர்வம் காரணமாக 18- ஆவது வயதில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் மெல்ல மெல்ல வளர்ந்து ஒன்றிய செயலாளர் பதவியை அடைந்தார். பின்னர், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் பதவி அவரை வந்தடைந்தது. இதே போல, பல்வேறு கட்சி பொறுப்புகளில் அவர் பதவி வகித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கடந்த 1989- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் தோல்வியை சந்தித்தார்.
தேசிய அரசியலில் கோலோச்சிய ஓ.எஸ். மணியன்
பின்னர், 1995- ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 2001- ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக ஓ. எஸ். மணியன் இருந்து வந்தார். பின்னர், மீண்டும் 2008- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட ஓஎஸ் மணியன் 2013- ஆம் ஆண்டு வரை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இதனிடையே அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியையும் வகித்துள்ளார்.




ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்த ஓ.எஸ்.மணியன்
இதை தொடர்ந்து, மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பிய ஓ. எஸ். மணியன், 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட ஓ. எஸ். மணியன் வெற்றி பெற்று எம். எல். ஏ. ஆனார். அப்போது, அவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வேதாரண்யம் தொகுதியில் களம் இறங்கிய ஓ. எஸ். மணியன் மீண்டும் எம்எல்ஏவாக வெற்றி பெற்று தொடர்ந்து வருகிறார்.
வேதாரண்யத்தில் மீண்டும் கோலோச்சுவாரா ஓ.எஸ்.மணியன்
கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி. வி. ராஜேந்திரனை வீழ்த்தி 60,836 (41.44 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ். கே. வேத ரத்தினத்தை வீழ்த்தி 78,719 (50.02 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றியே தனதாக்கி கொண்டார். இதனால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வேதாரண்யம் தொகுதியில் ஓ. எஸ். மணியன் களம் இறக்குவதற்காக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலிலும் வெற்றியை தனதாக்கி கொள்வார் என்று அந்த கட்சியினர் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: Nainar Nagendran Tamil Nadu Election: அதிமுக டூ பாஜக… கட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை… மீண்டும் வெற்றிக் கொடி நாட்டுவாரா நயினார்!