மக்களின் நம்பிக்கைகளை வாக்குகளாக மாற்ற வேண்டும்… திமுக மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு!
Chief Minister MK Stalin Speech: திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களின் நம்பிக்கைகளை வாக்குகளாக மாற்றி காண்பிக்க வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 27) நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த மண்டலத்தில் எப்படி வெற்றி பெற்றோமோ, அதே போல வருகிற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 2.50 கோடி வாக்குகளுக்கு குறையாமல் வாங்கி காண்பிக்க வேண்டும். இதை வாங்கி காட்டுவது உங்கள் பொறுப்பாகும். உங்களுக்கு என்ன தேவை என்பதோ அதை நிறைவேற்றி தருவது எனது பொறுப்பாகும். 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவது லட்சியம். செந்தில் பாலாஜியின் ஆற்றல் எதிரிகளின் தூக்கத்தை கெடுக்கிறது.
எதிரிகளின் சிம்ம சொப்பனம் செந்தில் பாலாஜி
எதிரிகளின் சிம்ம சொப்பனமானவர் செந்தில் பாலாஜி. அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அரசியலில் முக்கிய பங்காற்றிய ஊர் கோவை. உங்களை பார்த்து நானும் உற்சாகம் அடைகிறேன். கடந்த தேர்தலில் இங்கு நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த முறை வரும் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்துங்கள். தமிழகத்தில் பல்வேறு சிக்கல்களை கடந்து அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம். உலக தரத்தில் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட உள்ளது. ஏராளமான திட்டங்கள் மேற்கு மண்டலத்திற்கு வர உள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள 39 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.
மேலும் படிக்க: திமுக vs அதிமுக.. அதிமுக ஆட்சியுடன் விலைவாசி உயர்வை ஓப்பிட்டு இபிஎஸ் விமர்சனம்..




ஒரு பூத்துக்கு 350 வாக்குகள் பெற வேண்டும்
இந்த தேர்தலில் ஒரு பூத்துக்கு 350 வாக்குகள் பெற வேண்டும். பல சமூக ஊடகங்கள் இருந்தாலும், வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்கு கேட்பது என்பது மிகவும் முக்கியமாகும். நமது சாதனைகளை கூறி வாக்கு கேட்க வேண்டும். வாக்காளர்கள் வாக்களிக்கும் வரை நமக்கு ஓய்வு என்பது இருக்கக்கூடாது. வீடு, வீடாக சென்று பணிவாகவும், கனிவாகவும், நட்பாகவும், அன்பாகவும் பழகி வாக்குகளை கேட்க வேண்டும். 75 ஆண்டுகளாக திமுக வலிமையாக இருப்பதற்கு இதுவே காரணமாகும். திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக மாற்ற வேண்டும்
இதில், மகளிர் உரிமை தொகை, மகளிர் விடியல் திட்டம், புதுமை பெண் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளன. திமுகவின் சாதனைகள் அடங்கிய புத்தகம் உங்களுக்கு வழங்கப்படும். அதில் உள்ள சாதனைகளை ஒவ்வொரு வீட்டிலும் கூறினால்தான் மக்களின் நம்பிக்கை வாக்குகளாக மாறும். திமுகவின் வளர்ச்சி பிடிக்காத கட்சியாக பாஜக உள்ளது. அதிமுகவே கிளை கழகமாக கொண்டு பாஜக வளர முயற்சி செய்கிறது. ஜெயலலிதா மீது திடீரென மோடிக்கு பாசம் வந்துள்ளது. ஜெயலலிதா புகழ் பாடினாள் வாக்குகள் வரும் என்று பாஜகவினர் எண்ணுகின்றனர். உங்களின் நடிப்பை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. மானங்கெட்டு திரிய வாழ்த்துகள் – காட்டமான பதிவை வெளியிட்ட அதிமுக ஐடி விங்..