அதிமுகவில் ஒட்டுமொத்தமாக இணைந்த 18 கிளை செயலர்கள்… காலியான ஓபிஎஸ் கூடாரம்…!
O Panneerselvam Supporters Join Aiadmk: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் தலைவர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களும், கிளைச் செயலாளர்களுமான சுமார் 18 பேர் அந்த அணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இதனால், ஓபிஎஸ்ஸின் கூடாரம் காலியாகி உள்ளது.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை தொடங்கி நடத்தி வந்தார். இவருக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் அவருக்கு ஆதரவு அளித்து வந்தனர். அதன்படி, அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் பல்வேறு முறை கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், அவர்களது கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி செவி சாய்க்கவில்லை. இதனிடையே, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பாக தெளிவான முடிவை பன்னீர்செல்வம் எடுக்காமல் இருந்து வந்தார். இதன் காரணமாக, அதிருப்தி அடைந்த அவரது ஆதரவாளர்கள் பலர் அவரிடம் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகினர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி
இந்த நிலையில், எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் திகைத்து வந்த ஓ. பன்னீர்செல்வம் திடீரென சென்னை அறிவாலயத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார். அதிமுக ஆட்சி காலத்தில் 3 முறை முதல்வராக இருந்த ஒ. பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த முடிவு, அவருக்கு சாதகமாக இருக்கிறதோ இல்லையோ, ஆனால், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் படிக்க: தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு… செம குஷியில் கட்சியினர்… எம்.பி. ஆகிறாரா எல்.கே.சுதீஷ்?




அதிமுவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேர்
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் அவரது அணியில் இருந்து விலகி தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வந்தனர். அதன்படி, தேனி மாவட்டம், க. மயிலை ஒன்றியத்தின் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், குமணன்தொழு, மண்ணூத்து, வனத்தாய்புரம், தேவேந்திரபுரம், கோம்பைதொழு, சென்றாயபுரம், வலம்புரி, முத்துலாபுரம் உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த கிளைச் செயலாளர்கள் 18 பேர் அதிமுக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமையில், தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ். எம். ராமர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
ஓ. பன்னீர் செல்வத்தின் கூடாரம் காலியானது
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், மாவட்ட செயலாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவரிடம் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அந்த கட்சியில் இணைந்தார். இவ்வாறாக ஓ பன்னீர்செல்வம் அணியில் இருந்த அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகி, முன்பு இருந்த அதிமுகவில் தங்களை இணைத்து வருகின்றனர். இதன் காரணமாக ஓ. பன்னீர்செல்வத்தின் கூடாரம் முற்றிலுமாக காலியாகி உள்ளது.
மேலும் படிக்க: தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்.. தீவிர கட்டுப்பாடுகள்!