பாலிசிதாரரும் நாமினியும் இறந்தால் காப்பீட்டுத் தொகை யாருக்கு கிடைக்கும்?
Insurance Alert: கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவரைத் தவிர 241 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிலர் குடும்பத்துடன் உயிரிழந்தனர். இதுபோன்ற நேரங்களில் பாலிசிதாரர் மற்றும் நாமினி இருவரும் உயிரிழந்தால் காப்பீட்டுத் தொகை யாருக்கு கிடைக்கும் என்ற சந்தேகம் எழுவது இயல்பு. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்போதெல்லாம், திடீரென ஏற்படும் உடல்நலப் பிரச்னைகள் மற்றும் விபத்துகளால் மக்கள் இறக்கின்றனர். அதனால்தான் நிபுணர்கள் அனைவரும் காப்பீடு செய்ய பரிந்துரைக்கின்றனர். சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத சூழ்நிலைகளும் ஏற்படும். கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்து சம்பவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு பயங்கர விபத்து நடக்கும் என யாராவது சிந்தித்திருப்போமா? பலரும் தங்க உறவுகளைப் பார்க்க, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக விமானத்தில் சென்றிருப்பார்கள். இந்த விபத்தில் ஒருவரைத் தவிர அனைவரும் பலியானார்கள். இந்த விபத்து குறித்து பலருக்கும் பல சந்தேகங்கள் இருக்கும். குறிப்பாக இன்சூரன்ஸ் எடுத்திருக்கும் நபர் மற்றும் நாமினி இருவரும் இறந்தால் காப்பீட்டுத் தொகையை யார் பெறுவார்கள்? என்ற கேள்வி எழும். பிடிஐயில் வெளியான கட்டுரையின் படி இதுகுறித்து விளக்கமாக பார்க்கலாம்.
பிடிஐயில் வெளியான செய்தியின் படி, அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு, பாலிசிதாரர் மற்றும் நாமினியாக நியமிக்கப்பட்ட இருவரும் விபத்தில் இறந்த பல வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்வேக்கு பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் விமானம் ஒரு மருத்துவமனையின் விடுதி கட்டிடத்தின் மீது மோதியதில் 241 பயணிகள் பலியானார்கள். கட்டிடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 35 பேர் வரை உயிரிழந்தனர்.
இதுபோன்ற சூழ்நிலைகளில், துக்கத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அடுத்து என்ன நடக்கும், காப்பீட்டுத் தொகையை எவ்வாறு பெறுவது என்பது பற்றி முடிவெடுக்க வேண்டியிருக்கும். பாலிசிதாரர் மற்றும் நாமினி இருவரும் இறந்தால் காப்பீட்டுத் தொகை யாருக்குப் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.




பாலிசிதாரரும் நாமினியும் இறந்தால் காப்பீடு யாருக்கு கிடைக்கும்?
பாலிசிதாரரும், நாமினியும் உயிரிழந்தால், காப்பீட்டுத் தொகை ஒருபோதும் ரத்து செய்யப்படாது, ஆனால் அது பாலிசிதாரரின் சொத்தின் ஒரு பகுதியாக மாறும். இது பொதுவாக பாலிசிதாரரின் குழந்தைகள், உயிருடன் இருக்கும் பெற்றோர் அல்லது கணவன், மனைவி போன்ற வாழ்க்கைத் துணைவர்கள் போன்ற சட்டப்பூர்வ வாரிசுகள் உரிமை கோரும் பட்சத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும். ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு பல காப்பீட்டு நிறுவனங்கள் இதே போன்ற வழக்குகளை எதிர்கொள்கின்றன. எல்ஐசி, இஃப்கோ, டாடா ஏஐஜி போன்ற பல காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர் மற்றும் நாமினி இருவரும் இறந்ததால், அவர்களது வாரிசுகளிடம் இருந்து காப்பீட்டு தொகைக்கான கோரிக்கைகளைப் பெற்றுள்ளன.
சில நிறுவனங்கள் காப்பீடு கோரிக்கைகளை விரைவாகத் தீர்ப்பதற்காக விதிகளைத் தளர்த்துகின்றன, உதாரணமாக, இந்த வழக்குகளில் நீதிமன்றத்தின் உத்தரவுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, வாரிசுகள் ஒப்புக்கொண்டால், சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து வரும் கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு தொகையை அளிப்பதாக எல்ஐசி தெரிவிக்கிறது. வழக்கமாக, காப்பீட்டு நிறுவனங்கள் ஆவணங்களைச் சரிபார்த்து, பாலிசிதாரர் அல்லது நாமினி ஆகியோருடன் உரிமைகோருபவரின் உறவை உறுதிசெய்த பிறகு பணத்தை அளிக்கின்றன.
பல சட்டப்பூர்வ வாரிசுகள் இருந்தால் இந்த சூழ்நிலையில் நிறுவனம் என்ன செய்யும்? இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் சட்டப்பூர்வ வாரிசுகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் பிரிவில் மகன்-மகள், மனைவி, தாய் போன்ற ஒன்றாம் வகுப்பு சட்டப்பூர்வ வாரிசுகள் அடங்குவர். வகுப்பு ஒன்று சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லையென்றால் வகுப்பு 2 கருதப்படுகிறது. இதில் தந்தை, சகோதரன்-சகோதரி, மருமகன்-மருமகள் ஆகியோர் அடங்குவர்.