Ahmedabad Air India crash : காப்பீடு மற்றும் நஷ்டஈடு குறித்து அறிந்திருக்க வேண்டியவை
Passenger Insurance Explained : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர அனைவரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் இது போன்ற விபத்துக்களின் போது மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கும் காப்பீடு தொகை மற்றும் நஷ்ட ஈடு குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவற்றை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கடந்த ஜூன் 12,2025 அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவரைத் தவிர 241 பேர் மரணமடைந்தனர். மேலும் விடுதியில் இருந்த மாணவர்கள் சிலரும் இந்த விபத்தில் மரணமடைந்தனர். இது போன்ற துயரமான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கிடைக்கக்கூடிய நஷ்டஈடு மற்றும் காப்பீட்டு தொகை குறித்து அறிந்து கொண்டிருப்பது முக்கியம். ஒரு பயணிக்கு விமான நிறுவனம் மற்றும் தனிப்பட்ட காப்பீடு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்வது அவசியம். பிசினஸ் ஸ்டேண்டர்டு இணையதளத்தில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கிடைக்க கூடிய காப்பீடு தொகை, மற்றும் விமான நிறுவனங்கள் வழங்கு நஷ்ட ஈடு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு வழங்கும் நஷ்ட ஈடு
சர்வதேச விமானங்களில் பயணித்தவர்கள் மாண்ட்ரியல் கன்வென்ஷன் (Montreal Convention) என்பதின் கீழ் பாதுகாப்பு பெறுகிறார்கள். இது படி, பயணிகளின் உயிரிழப்புக்கு விமான நிறுவனம் சுமார் ரூ.1.7 கோடி வரை நஷ்டஈடு வழங்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறைந்தபட்ச பொறுப்பாகவே கருதப்படுகிறது. இந்திய விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்தியாவின் விமான சட்டம், 1972 சட்டத்தின் கீழ் சுமார் ரூ.1.1 கோடி வரை நஷ்டஈடு வழங்கப்படும். அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு டாடா குழுமம் ரூ. 1 கோடியும், ஏர் இந்தியா நிறுவனம் ரூ.25 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இன்சூரன் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் நிவாரணம்
இந்த இன்சூரன்ஸ் பாதுகாப்புகள் மட்டுமின்றி, பெரும்பாலான பயணிகள் தனிப்பட்ட டிராவல் இன்சூரன்ஸ் எடுத்திருப்பார்கள். இது விமான நிறுவனங்கள் வழங்கும் நஷ்டஈடுகளைத் தாண்டி கூடுதல் பாதுகாப்பாக அமையும். டிராவல் இன்சூரன்ஸ் விமான விபத்துகளினால் ஏற்படும் மரணம், மருத்துவ சிகிச்சை மற்றும் நாடு திரும்பும் செலவுகளை கூட கவனிக்கும். சில டிராவல் இன்சூரன்ஸ் திட்டங்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலும் நஷ்டஈடு அளிக்கின்றன.
மேலும், வேலை காரணமாக பயணித்தவர்கள் என்றால், அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் குரூப் இன்சூரன்ஸ் (Group Insurance) வழியாக கூடுதல் நஷ்டஈடுகள் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பணியாளர் குழு காப்பீட்டு திட்டம் (CGEGIS) போன்ற திட்டங்கள் வழியாக கூடுதல் நிதி ஆதரவு வழங்கப்படும். அதேபோல் தனிப்பட்ட டெர்ம் இன்சூரன்ஸ் வைத்திருந்தால், அதிலிருந்தும் நஷ்டஈடு பெற முடியும். இந்தக் காப்பீடு வகைகள் அனைத்தும் பொதுவாக வரிவிலக்கு உடையதாகவே இருக்கும்.
கிரெடிட் கார்டுகள் வழங்கும் காப்பீடு
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான கிரெடிட் கார்டுகளும் சாலை விபத்து மற்றும் விமான விபத்து காப்பீடு வசதியை வழங்குகின்றன. குறிப்பாக எச்டிஎஃப்சி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் போன்ற வங்கிகளின் பிரீமியம் கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.1 கோடி வரை காப்பீடு வழங்குகின்றன. ஆனால் கட்டாயமாக அந்த விமான டிக்கெட் அதே கிரெடிட் கார்டில் புக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பல்வேறு நிலைகளில் நஷ்டஈடு பெற வாய்ப்பு உள்ளது. விமான நிறுவனம், பயணக் காப்பீடு, பணியிட காப்பீடு, தனிப்பட்ட டெர்ம் இன்சூரன்ஸ், மற்றும் கிரெடிட் கார்டு இன்சூரன்ஸ் ஆகியவை பயணிகளின் பாதுகாப்பு வழங்கும். இவை அனைத்தையும் தனித்தனியாக கிளைம் செய்ய முடியும் மற்றும் பெரும்பாலும் வரிவிலக்கு உடையவை.