நண்பருக்கு கிரெடிட் கார்டை தருகிறீர்களா? இந்த 6 சிக்கல்கள் ஏற்படலாம்!
Credit Card Alert: இந்த காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டுகள் நம்முடைய வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டன. ஆனால் நண்பர்களுடன் கிரெடிட் கார்டை பகிர்வது பலவிதமான நிதி சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, உங்கள் நட்பில் விரிசல் ஏற்படலாம். இந்த கட்டுரையில் நண்பர்களுக்கு கிரெடிட் கார்டைப் பகிர்வதால் ஏற்படும் 6 சிக்கல்கள் குறித்து பார்க்கலாம்.

இந்த காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டுகள் (Credit Card) நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கிய நிதி ஆதாரமாக மாறியுள்ளது. அன்றாட செலவுகள், ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping), பயண செலவுகள் போன்ற பல தேவைகளுக்காக பலரும் கிரெடிட் கார்டை பயன்படுத்துகின்றனர். இதில் குடும்ப உறுப்பினர்களுக்கான அட்ஒன் கிரெடிட் கார்டுகளும் கிடைக்கின்றன. அது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், ஒருவர் தனது தனிப்பட்ட கிரெடிட் கார்டை நண்பர்கள் அல்லது பிறரை பயன்படுத்த அனுமதிப்பது என்பது சாதாரண உதவியாகத் தெரிந்தாலும், இதனால் நிதி மற்றும் சட்டபூர்வ சிக்கல்கள் ஏற்படக் கூடும். நண்பர்களுக்கு கிரெடிட் கார்டை பயன்படுத்துவதற்காக தரும் முன் கவனிக்க வேண்டிய ஆறு முக்கிய அம்சங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
1. செலவுகள் அனைத்துக்கும் நீங்கள் தான் பொறுப்பு
உங்கள் கிரெடிட் கார்டை யார் பயன்படுத்தினாலும், அந்தக் கடன் உங்கள் பெயரில்தான் பதிவாகும். உங்கள் நண்பர் நேர்மையாக செலவுசெய்தாலும், தவறாக பயன்படுத்தினாலும், அதற்கான கட்டணத்தை செலுத்தாமல் இருந்தால், அது உங்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கும். இது உங்கள் நட்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். உதாரணமாக நண்பர் ஒருவர் உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒரு பொருள் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். அந்த பொருளுக்கான பணத்தை மட்டுமே உங்களுக்கு அளிப்பார். அவர் தாமதமாக உங்களுக்கு பணம் அளித்தால் தாமதத்துக்கான கட்டணத்தை நீங்கள் தான் செலுத்த வேண்டியிருக்கும்.
2. கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம்
கிரெடிட் ஸ்கோரை கணக்கிடும் போது உங்கள் கடனை பயன்படுத்திய விகிதம் (Credit Utilisation Ratio) முக்கியப் பங்கு வகிக்கிறது. உதாரணமாக உங்கள் நண்பர் கிரெடிட் கார்டை, லிமிட்டைத் தாண்டி செலவழித்தால் அல்லது தவறான முறையில் பணத்தை திருப்பி செலுத்தினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு கடன் பெறுவதற்கே தடையாக மாறும்.




3. சிக்கல்கள் ஏற்பட்டால் புகார் அளிக்க முடியாது
நண்பர் உங்களுடைய அனுமதி இல்லாமல் அதிகம் செலவழித்தாலும், நீங்கள் தான் அவருக்கு கார்டை அளித்துள்ளீர்கள் என்பதால், வங்கியிடம் முறையான புகார் செய்ய முடியாது. உங்கள் புகாரை ஏற்க வங்கிகள் தயங்கும், காரணம் உங்கள் சார்பாகவே கார்டு பயன்படுத்தப்பட்டிருக்கறது. உங்கள் நண்பர் என்பதால் நேரடியாகவும் அவரை கட்டுப்படுத்துவது சிரமம்.
4. சட்ட மற்றும் பாதுகாப்பு அபாயங்கள்
பொதுவாக கிரெடிட் கார்டு நிறுவனங்கள், கார்டை மற்றவரிடம் கொடுப்பதை அனுமதிப்பதில்லை. உங்கள் நண்பர் தவறாக அல்லது சட்டவிரோதமாக கார்டைப் பயன்படுத்தினால், அது உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரம் உங்கள் கார்டை பயன்படுத்தி மோசடி நடந்தால், நீங்கள் தான் விசாரணைக்குட்படுத்தப்படுவீர்கள்.
5. நட்பிலும் நம்பிக்கையிலும் விரிசல் ஏற்படலாம்
பணம் தொடர்பான விஷயங்களில் ஏற்படும் சிறிய தவறுகள் கூட உறவுகளில் விரிசலை ஏற்படுத்தலாம். உங்கள் நண்பர் பணத்தை திருப்பி செலுத்த மறந்துவிட்டால் அல்லது தாமதித்தால், இது உங்கள் நட்பு முறிவுக்கு கூட காரணமாக அமையும்.
6. பாதுகாப்பான மாற்றுவழிகளை முயற்சிக்கலாம்
உங்கள் கிரெடிட் கார்டை நேரடியாக நண்பரிடம் கொடுப்பதைவிட, அதற்கு மாற்றாக நீங்களே அவருக்கு உதவலாம். உதாரணமாக, அவர் எந்த பொருளை வாங்க விரும்புகிறாரோ, அதை உங்கள் கார்டை பயன்படுத்தி நீங்களே கட்டணம் செலுத்தி வாங்கிக்கொடுக்கலாம். இதனால் செலவு உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். பின்னர் அதற்கு கட்டணத்தை உங்கள் நண்பரிடம் இருந்து வாங்கிக்கொள்ளலாம்.
மேலும் யுபிஐ, மொபைல் வாலெட் போன்ற டிஜிட்டல் பரிமாற்ற வழிகளையும் பயன்படுத்தலாம். இதனால் உங்கள் கார்டை பகிர தேவையில்லை.