பதிவு செய்தால் மட்டும் சொத்தின் உரிமையாளர் ஆக முடியாது – உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நிபுணர் எச்சரிக்கை
Must-Know Property Rule : இந்தியாவில் வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் வைத்திருப்பது பலரது கனவாக இருக்கிறது. இந்த நிலையில் நிலம் வாங்கும்போதோ, வீடு வாங்கும்போதோ எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சொத்துக்களை பதிவு செய்வதால் மட்டும் அதன் உரிமையாளர் ஆக முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டு நிபுணர் சர்த்தக் அஹுஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் (India) உறவினர்களிடையே சொத்துப் பிரச்னைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இது தொடர்பாக பலரும் நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். பல ஆண்டுகளாக வழக்கு நடைபெறும் என்றாலும் சரியான தீர்வு கிடைக்கும் என மக்கள் நீதிமன்றத்தை நம்புகின்றனர். இந்தியாவில் சொத்து விவகாரங்கள் மற்றும் குடும்பத் தகராறுகள் தொடர்பான சட்ட வழக்குகள் தான் 70 சதவிகிதத்தில் இருப்பதாக முதலீட்டு நிபுணர் சர்த்தக் அஹுஜா தனது லிங்க்ட்இன் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சொத்தை (Property) உங்கள் பெயரில் பதிவு செய்தால் மட்டுமே அதற்கு நீங்கள் உரிமையாளர் ஆக முடியாது என அவர் எச்சரிக்கிறார். இதற்கு அவர் உச்சநீதிமன்றத்தின் (Supreme Court) தீர்ப்பையும் சுட்டிக்காட்டுகிறார்.
பதிவு செய்தால் மட்டும் சொத்தின் உரிமையாளர் ஆக முடியாது
சமீபத்தில் ஒருவழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சொத்தை நமது பெயரில் பதிவு செய்யும் நடைமுறை மட்டுமே, அந்த சொத்தின் உரிமையாளர் ஆக முடியாது என கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், உரிமை தானாகவே ஏற்படுவதில்லை. இதற்கு சில ஆவணங்களும் சட்ட ரீதியான நடைமுறையும் தேவைப்படும் என முதலீட்டு நிபுணர் அஹுஜா தெரிவித்துள்ளார்.




சொத்தின் உரிமை குறித்து நிபுணர் சர்த்தக் அஹூஜாவின் லிங்க்ட்இன் பதிவு
சொத்தின் உரிமையை நிரூபிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்
- பதிவு செய்யப்பட்ட வில் எனப்படும் இறுதிச்சான்று தேவை. இது தான் நீதிமன்றத்தில் செல்லுபடியாகும்.
- வாரிசு சொத்தாக இருந்தால் சகோதரர் மற்றும் சகோதரிகளிடம் இருந்து எங்களுக்கு இதில் உடன்பாடு இருக்கிறது என்ற அனுமதி கடிதம் தேவை. சொத்தை விற்பவர்கள் தங்கள் சகோதரர்களிடம் இருந்து இதனைப் பெற வேண்டும்.
- நமக்கு சொத்தை விற்க சம்பந்தப்பட்ட நபர் வழங்கும் பவர் ஆஃப் அடார்னி (Power of Attorney) அல்லது அக்ரிமென்ட் மட்டும் போததாது.
- சொத்தை வாங்குபவர் விற்பவருக்கு பணம் செலுத்தப்பட்டதை உறுதி செய்ய வங்கி கணக்கு விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.
- பதிவு, விற்பனைப்பத்திரம் உங்களிடம் இருப்பது மட்டும் போதாது. அந்தச் சொத்தை நீங்கள் உண்மையில் பயன்படுத்தி கொண்டிருக்கிறீர்களா என்பது மிக முக்கியம். உதாரணம் ஒரு வீடு அல்லது நிலம் உங்கள் பெயரில் பதிவு செய்திருப்பீர்கள். அந்த வீட்டில் நீங்கள் வாழவில்லையென்றால் அல்லது உங்கள் நிலத்தை குத்தகை மூலம் வேறு ஒருவர் பயன்படுத்திக்கொண்டிருந்தாலோ சிக்கல் ஏற்படும்.
- மின்சாரக் கட்டணம், தண்ணீர் வரி வீட்டு வரி ஆகியவற்றை சரியாக செலுத்திய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். எங்காவது தவறு நடந்திருந்தால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
- மதர் டீட் (Mother Deed) ஆவணம் வைத்திருக்க வேண்டும். இது சொத்தின் வரலாறு மற்றும் உரிமை தெளிவாக இருக்க வேண்டிய ஆவணம்.
- கட்டிடத்திற்கான அனுமதி பெற்றிருக்க வேண்டும்.