பிஎம் ஸ்வநிதி திட்டம் – சிறு வியாபாரிகளுக்கு ரூ.90,000 கடன் – எப்படி பெறுவது?
PM SVANidhi Scheme : சாலையோர வியாபாரிகளுக்காக மத்திய அரசு பிஎம் ஸ்வநிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம், வியாபாரிகள் எவ்வித உத்தரவாதமும் அல்லது பிணையமும் இன்றி ரூ.90,000 வரை கடன் பெறலாம். குறிப்பாக புதிதாக தொழில் தொடங்க விரும்புகிறவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சிறு தொழில்முனைவோருக்காக மத்திய அரசு பிஎம் ஸ்வநிதி என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், எவ்வித பிணையமும் இன்றி கடனைப் பெறலாம். சிக்கலான ஆவணங்கள் ஏதுமின்றி எளிதாகக் கடன்களைப் பெறும் வசதி இதில் உள்ளது. சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு மானியங்கள் மற்றும் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதிகள் உள்ளிட்ட பல நன்மைகளை மத்திய அரசு வழங்குகிறது.
அந்த வகையில் சாலையோர வியாபாரிகளுக்காக மத்திய அரசு பிஎம் ஸ்வநிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம், வியாபாரிகள் எவ்வித உத்தரவாதமும் அல்லது பிணையமும் இன்றி ரூ.90,000 வரை கடன் பெறலாம். இதற்கென ஒரு சிறப்பு கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது, இதன் மூலம் பயனாளிகள் தேவைப்படும்போது பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஜூன் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த சாலையோர வியாபாரிகளுக்குப் பெரிதும் உதவியது. இத்திட்டம் மார்ச் 2030 வரை செயல்பாட்டில் இருக்கும்.
இதையும் படிக்க : இனி வங்கிகள் இஷ்டத்திற்கு வட்டி போட முடியாது.. செக் வைத்த ஆர்பிஐ!
எப்படி கடன் பெறுவது?
இக்கடனைப் பெறச் சிறப்பு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை; ஆதார் அட்டை போதுமானது. உங்கள் ஆதார் அட்டை மற்றும் வங்கி விவரங்களைச் சமர்ப்பித்தாலே போதுமானது. இக்கடனை மாதத் தவணைகளாக திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும், இக்கடனைப் பெற அருகிலுள்ள எந்தவொரு வங்கிக்கும் நீங்கள் செல்லலாம். பிஎம் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் அங்கு உங்கள் தகுதி சரிபார்க்கப்பட்டு, கடன் விரைவாக அனுமதிக்கப்படும்.
இதுவரை நாடு முழுவதும் 75.5 லட்சம் பேர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.17,800 கோடிக்கும் அதிகமான கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. இப்பயனாளிகளில் 55 லட்சம் பேர் டிஜிட்டல் முறையில் பலன்களைப் பெற்றுள்ளனர். கடனுக்கான வட்டியைச் சரியான நேரத்தில் செலுத்துவோருக்கு வட்டி மானியம் மற்றும் ‘கேஷ்பேக்’ சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் மூலம் பயனாளிகள் மொத்தம் ரூ.800 கோடி நிதியைப் பெற்றுள்ளனர். பிஎம் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் வரம்பு முன்பு ரூ.80,000 ஆக இருந்த நிலையில், மத்திய அரசு அதை மேலும் ரூ.10,000 அதிகரிக்க முடிவு செய்தது. தற்போது, சிறு தொழில்முனைவோர் ரூ.90,000 வரை கடன் பெறலாம். கடன் வழங்குவதற்கு முன் அதற்கான தகுதி சரிபார்க்கப்படுகிறது. கடன் தொகையை மூன்று கட்டங்களாகப் பெறலாம்: முதலில் ரூ.15,000, அதைத் தொடர்ந்து ரூ.25,000, மற்றும் இறுதியாக மூன்றாம் கட்டத்தில் ரூ.50,000 எனத் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதையும் படிக்க : இதை செய்யவில்லை என்றால் ஆக.16 முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. மானியமும் கிடைக்காது!
ரூ.30,000 வரம்பு கொண்ட கிரெடிட் கார்டு
பயனாளிகளுக்கு யுபிஐயுடன் இணைக்கப்பட்ட ரூபே கிரெடிட் கார்டும் வழங்கப்படுகிறது. முதல் இரண்டு கடன் தவணைகளைச் சரியாகச் செலுத்துபவர்கள், ரூ.30,000 வரம்பு கொண்ட கிரெடிட் கார்டைப் பெறத் தகுதி பெறுகிறார்கள். பணப் பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கார்டை யுபிஐ உடன் இணைக்கலாம். மேலும், சில்லறை மற்றும் மொத்த விற்பனைப் பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் கட்டணச் செலுத்துதல்களுக்கு ‘கேஷ்பேக்’ சலுகையும் வழங்கப்படுகிறது.



