இனி உஜ்வாலா திட்டத்தின் கீழ் 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!
Pradhan Mantri Ujjwala Yojana Scheme | பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை, எளிய குடும்பங்களுக்கு 9 கேஸ் சிலிண்டர்களுக்கு ரூ.300 மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த 9 சிலிண்டர்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (Pradhan Mantri Ujjwala Yojana) திட்டத்தில் ஆண்டுக்கு 9 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி வரும் காலங்களில் இந்த உஜ்வாலா திட்டத்தில் வெறும் 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உஜ்வாலா திட்டம் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9 சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம்
இந்தியாவில் உள்ள ஏழைய, எளிய குடும்பங்களும் விறகு அடுப்பை விடுத்து கேஸ் சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அறிமுகம் செய்த திட்டம் தான் உஜ்வாலா திட்டம். 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் சுமார் 10.58 கோடி குடும்பங்கள் கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை பெற்று வருகின்றனர். திட்டம் தொடங்கப்பட்டபோது ஆண்டுதோறும் 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க : எஸ்ஐபி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் உண்மை நிலவரம் இதுதான்.. முதலீட்டுக்கு முன்பு தெரிந்துக்கொள்ளுங்கள்!




அதன் பிறகு, 2022 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வந்தது. அந்த மானிய தொகை பிறகு ரூ.300 ஆக உயர்த்தப்பட்டது. இந்த மானிய தொகை உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தது. 12 சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.300 மானியம் சில நாட்கள் கழித்து 9 சிலிண்டர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மானியம் வழங்கப்படும் சிலிண்டர்களுக்கான எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
இனி 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்
இதுவரை உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக கூடுதல் செயலாளர் பிரவீன்மால் கனூஜா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேற்கு ஆசியா போர் காரணமாக உலக நாடுகள் கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான சிக்கல்களை எதிர்க்கொண்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள பிரவீன்மால் கனூஜா, உஜ்வாலா பயனாளிகளின் சராசரி ஆண்டு நுகர்வுக்கு 4 சிலிண்டர் என்ற எண்ணிக்கை பெருமளவில் ஒத்துப்போவதாக கூறியுள்ளார்.