Reciprocal Tariff : பரஸ்பர வரி விதிப்பு நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டமில்லை.. டொனால்ட் டிரம்ப் அதிரடி!
America's Reciprocal Tariffs | இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இந்த நிலையில், அதற்கான கால அவகாசம் முடிவடையும் நிலையில், வரி விதிப்பு நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா, ஜூலை 01 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அறிவித்த பரஸ்பர வரி (Reciprocal Tariff) விதிப்பு நிறுத்தம் முடிவடையும் நிலையில், அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டிரம்பிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். மேலும், பரஸ்பர வரியில் இருந்து விலக்கு பெற டிரம்ப் ஒரு சலுகையையும் வழங்கியுள்ளார். இந்த நிலையில், பரஸ்பர வரி விதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்த டொனால்ட் டிரம்ப்
2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அதிபராக பதவியேற்ற அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் பரஸ்பர விதியை அறிவித்தார். இது உலக நாடுகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். பரஸ்பர வரி விதிப்புக்கான டிரம்பின் கால அவகாசம் ஜூலை 9, 2025 அன்று நிறைவடைகிறது.




பரஸ்பர வரி விதிப்புக்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டமில்லை – டொனால்ட் டிரம்ப்
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டொனால்ட் டிரம்பிடம், பரஸ்பர வரி விதிப்பை மேலும் சில காலத்திற்கு ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிரம்ப், கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை. அதற்கு பதிலாக அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கிறோம். நீங்கள் 20 சதவீதமோ, 40 சதவீதமோ அல்லது 50 சதவீதமோ வரி செலுத்த வேண்டி இருக்கும் என்று சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.