திண்டுக்கல் ஜல்லிக்கட்டு: காளை முட்டி புது மாப்பிள்ளை உயிரிழப்பு – சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
Jallikattu Tragedy: திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் பிப்ரவரி 11, 2026 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் மாடு பிடி வீரர்கள், பொதுமக்கள் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர்.
திண்டுக்கல், பிப்ரவரி 11 : திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் இளைஞர் ஒருவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் போட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. புகையிலைப்படி புனித சந்தியாகப்பர் கோவில் திருவிழா கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி பிப்ரவரி 11, 2026 அன்று காலை தொடங்கியது. இதில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மற்றும் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 831 காளைகள் மற்றும் 333 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
மாடு முட்டி புதுமாப்பிள்ளை உயிரிழப்பு
இந்த விழாவில் பிடிபடாத காளைகளுக்கு விழா குழுவின் சார்பில் வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், சைக்கிள், நாற்காளி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த பாலகுரு என்ற வீரர் காளையை அடக்க முயன்றபோது காளை குத்தி பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்ற அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : ‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி’ – வேதாந்தா நிறுவனத்தின் திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு




இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக்ததை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 34 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு திறந்த நிலையில் கிணறுகள், குளம் மற்றும் ரயில் பாதைகள் இருந்தால் முறையான தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் அந்த பகுதியில் திறந்த நிலையில் கிணறுகள் இருந்தும், முறையான தடுப்புகள் அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கு முன்பும் இங்கு காளைகள் கிணற்றில் விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? “மக்கள் முடிவு செய்வார்கள்”.. மாணிக்கம் தாகூர் பதிலடி!
மேலும் அங்கு போதிய பந்தல் வசதி அமைக்கப்படாததால் வெயிலில் நின்று ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்த குழந்தைகள் பலர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீரர்களுக்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் போலிசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.