வாடிக்கையாளர் போல வந்து சைலண்ட் திருட்டு.. ஐபோனை அமுக்கி சென்ற பெண்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்!
Coimbatore Woman Stole Mobile: கோயம்புத்தூரில் செல்போன் கடையில் செல்போன் வாங்குவது போல நடித்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான ஐபோனை அந்த பெண் நூதனமாக திருடி சென்றார். இந்த திருட்டு சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.
கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள பிரபல டெக்டைல்ஸ் அருகே தனியார் செல்போன் விற்பனை மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சம்பவத்தன்று வாடிக்கையாளர் போல ஒரு பெண் ஒருவர் செல்போன் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது, கடையில் இருந்த ஊழியர்களிடம் செல்போன்கள் வாங்குவது போல நடித்து பல்வேறு விதமான செல்போன்களை காண்பிக்குமாறு அந்த பெண் கேட்டுள்ளார். இதை நம்பிய கடையின் ஊழியர்கள் தங்களிடம் உள்ள அனைத்து வகையான செல்போன்களையும் எடுத்து அவரிடம் காண்பித்துள்ளனர். அப்போது, அந்த செல்போன்கள் அனைத்தும் மேஜையின் மீது வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. இதில், வேறு வகை செல்போனை காண்பிக்குமாறு கடை ஊழியரை அந்த பெண் திசை திருப்பி உள்ளார்.
ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் திருட்டு
அவர், சற்று திசை திரும்பிய நிலையில், அந்த பெண் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான ஐபோன் 13- ஐ திருடி தனது பேக்கில் வைத்துக்கொண்டார். பின்னர் கடை ஊழியரிடம் சாதாரணமாக பேசிவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராத வகையில், ஐபோனை திருடிக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டார். பின்னர், கடை ஊழியர் மேஜையில் இருந்த செல்போன்களை எடுத்து மீண்டும் ஷோகேசில் வைத்த போது, ஒரு ஐபோன் பாக்ஸ் மட்டும் குறைவாக இருந்தது தெரியவந்தது.
மேலும் படிக்க: மேகதாது அணை திட்டத்துக்கு முற்றிலும் தடை.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் அதிரடி மனு!
காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர் அந்தப் பெண்ணை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த பெண் செல்போனை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் உடன் செல்போன் கடையில் உரிமையாளர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடி சென்ற அந்த பெண்ணை தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும், செல் போன் கடையில் திருட்டில் ஈடுபட்ட கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி ஸ்டாலின் அதிரடி கைது.. பெரும் பரபரப்பு!