ஈரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. காமுகனாக மாறிய தாய் மாமன்.. சிங்கப்பெண் போலீசால் வெட்டவெளிச்சமானது!
Gobichettipalayam Student Harassing: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தாய்மாமன் மற்றும் உடந்தையாக இருந்ததாக அவரது தாய் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சிங்கப்பெண் படை விழிப்புணர்வு நிகழ்ச்சியால் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை இந்த பள்ளியில் மாணவர்களிடம் பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது, அந்த பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் சிங்கப்பெண் போலீசாரிடம் தனது தாய் மாமா தன்னை காதலிப்பதாக தொடர்ந்து வற்புறுத்தி தொல்லை கொடுத்து வருவதாகவும், என்னை மிரட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், இது குறித்து வேறு யாரிடமும் தெரிவித்தால் சமூகவலைதளங்களில் தவறான தகவலை பரப்புவேன் என்று என்று தாய்மாமா மிரட்டியதாகவும் அந்த மாணவி தெரிவித்தார்.
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்
இதை கேட்டு போலீசார் மற்றும் ஆசிரயர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை போலீசார் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த மாணவியின் தாய் மாமனான கவுந்தப்பாடி அருகே உள்ள சின்னப்புலியூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் ( 27 வயது) என்பவரை படித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: ஆளில்லாத காட்டுப்பகுதி.. சிறுமிக்கு 6 பேர் கூட்டு வன்கொடுமை.. கடைசி நேரத்தில் தப்பிய தோழி.. பரபரப்பில் சென்னை!




போக்சோ சட்டத்தின் கீழ் தாய்மாமன் – தாய் கைது
இதில், அவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததும், காதல் தொல்லை அளித்ததும், மிரட்டி வந்ததும் உறுதி செய்யப்பட்டது. பின்னர், தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்ததுடன், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அவரது தாய் விஜயாவையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, இருவரையும் சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்களை தடுப்பதற்காக தமிழக அரசு சார்பில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது.
சிங்கப்பெண் விழிப்புணர்வால் வெளிச்சத்துக்கு வந்தது
மாவட்டத்தின் பல்வேறு நகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் இந்த சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசார் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை கண்டறிந்து தடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஈரோட்டில் மாணவர்களிடம் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மேற்கொண்டிருந்த நிலையில், பாலியல் தொல்லைக்குள்ளான மாணவி விழிப்புணர்வு அடைந்து தனக்கு நடந்த கொடூரத்தை கூறியதனால், சம்பந்தப்பட்ட நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரபல கபடி பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு.. வலைவீசிய போலீஸ்!