அமோனியா ரூபத்தில் வந்த எமன்.. அடுத்தடுத்து பலியாகும் தொழிலாளர்கள்.. 15- ஆக உயர்ந்த உயிரிழப்பு!
Ammonia Gas Leak Death Toll: திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் பண்ணையில் அமோனியா வாயு கசிந்த விவகாரத்தில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 21- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் சுமார் 100 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்தனர். மீதமுள்ள தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அறைகளில் தங்கி இருந்தனர். அப்போது, தொழிற்சாலை வளாகத்தில் ஒதுக்கு புறமாக இருந்த அமோனியா வாயு அடைக்கப்பட்டு இருந்த தொட்டியில் இருந்து திடீரென அமோனியா வாயு கசிய தொடங்கியது. இதனால் சுமார் 83 பேர் மயக்கம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு சம்பவம்
அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் முதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால், நாளுக்கு நாள் இந்த உயிரிழப்பு சம்பவம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அதன் படி, தற்போது வரை அம்மோனியா வாயு கசிவு உயிரிழப்பு சம்பவத்துக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், உயிரிழந்த 15 பேரும் பெண்கள் ஆவர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரீதி தேவி, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புதுபாரி நாயக் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: விழா பேனரில் 2- ஆவது இடம்.. நான்வேனா எழுந்து சென்றுவிடவா? மேடையிலேயே வெடித்து சிதறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி!




40 பேரில் 11 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை
மேலும், 40 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சுமார் 11 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 28 பேர் சிகிச்சை முடிந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு ரயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கோமா நிலைக்கு செல்லலாம் என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், அமோனியா வாயுவை பொருத்தவரை 20 பிபிஎம் முதல் 50 பிபிஎம் வரை மனித உடல் சமாளிக்கும்.
கோமா நிலைக்கு செல்ல வாய்ப்பு
ஆனால், 200 பிபிஎம் அளவுக்கு மேல் சுவாசித்ததால் நுரையீரல் போன்ற உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது நிகழ்ந்த விபத்தில் 150 பிபிஎம் அளவுக்கு மேல் அமோனியா வாயுவை தொழிலாளர்கள் சுவாசித்துள்ளதால் சிலருக்கு மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து சுயநினைவு இழந்து கோமா நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: தாயின் பிரிவு தந்த ஏக்கம்.. இந்த உலகமே வேண்டாம்.. சோகத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு!