சொத்து கேட்டு தாயை ‘தம்பல்ஸால்’ அடித்தே கொன்ற மகன்.. திருச்சியில் சோகம்!!
Trichy Crime News: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மதுபோதையில் சொத்துத் தகராறு காரணமாகத் தாயை உடற்பயிற்சி செய்யப் பயன்படும் தம்பல்ஸால் (Dumbbells) அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, ஆகஸ்ட் 08: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மதுபோதைக்கு அடிமையான மகன் ஒருவன், சொத்துத் தகராறில் பெற்ற தாயையே உடற்பயிற்சி செய்யப் பயன்படும் இரும்புத் ‘தம்பல்ஸால்’ தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மணப்பாறை காவல் துறையினர் குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.
மேலும் படிக்க: கல்லூரி மாணவியிடம் காக்கி உடையில் அத்துமீறிய காவலர்.. கோவை காவல் ஆணையர் எடுத்த அதிரடி நடவடிக்கை!
மனைவியை பிரிந்து வாழ்க்கை:
மணப்பாறை அடுத்துள்ள கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி செல்வி. இவர்களது இரண்டாவது மகன் வெங்கடேசன். மதுப்ப பழக்கத்திற்கு தீவிரமாக அடிமையான வெங்கடேசன், கடந்த 3 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
பெற்றோர்கள் தங்களது சொத்தை மூத்த மகனுக்கும் இளைய மகனுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்ட நிலையில், வெங்கடேசன் தனக்கும் சொத்தில் பங்கு தர வேண்டும் என்று தொடர்ந்து தனது தாய் செல்வியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
தம்பல்ஸால் கொடூரத் தாக்குதல்:
நேற்று இரவு மீண்டும் சொத்துப் பிரிப்பது தொடர்பாகத் தாய் செல்விக்கும், வெங்கடேசனுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த வெங்கடேசன் ஆத்திரமடைந்து, வீட்டில் உடற்பயிற்சிக்காக வைத்திருந்த கனமான இரும்புத் தம்பல்ஸை எடுத்துத் தாயின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் தாய் செல்வி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் படிக்க: தேனியில் பயங்கரம்.. காதல் வலையில் வீழ்த்தி சிறுமியை சீரழித்த சிறுவன்.. உடந்தையாக இருந்த பெற்றோர் கைது!
சிகிச்சை பலனின்றி மரணம்:
திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய் செல்வி, இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓட முயன்ற மகன் வெங்கடேசனை உடனடியாகக் கைது செய்தனர். மேலும், சம்பவம் நடந்த வீட்டிற்குத் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுபோதையில் பெற்ற தாயையே தம்பல்ஸால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.