திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டி? தூத்துக்குடி திமுகவினர் தீர்மானம்
தமிழக முதல்வர் விஜய் 2 தொகுதிகளில் வென்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, மே 16 : தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து திருச்சி கிழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?
தமிழக முதல்வர் விஜய் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வென்றார். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்தார். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தொகுதியில் அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.




இதற்கிடையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியட வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பதிவு
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து, 234 தொகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்ய 38 பேர் கொண்ட குழுவினரை நியமித்திருந்தேன்.
இன்று அவர்களுடனான சந்திப்பில் இந்த ஆய்வை எப்படி மேற்கொள்வது என, சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.
• நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைக் கழகத்தின்… pic.twitter.com/FeYxP1NnfE
— M.K.Stalin (@mkstalin) May 16, 2026
இதற்கிடையில் திமுக தோல்வி குறித்து கள ஆய்வு செய்ய 36 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி, கட்சிக்காரர்கள் சொல்லும் உண்மையை அப்படியே வந்து என்னிடம் சொல்வது மட்டுமே உங்கள் வேலை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீங்கள் யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம். யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது. இரண்டு பேர் கொண்ட குழுவாகத்தான் யாரையும் சந்திக்க வேண்டும். ஒருவர் மட்டும் தனியாகச் சந்திக்க கூடாது. கழகத்தினரை மனதுவிட்டுப் பேச அனுமதியுங்கள். அவர்களின் குறைகளை, தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை அவர்கள் கொட்டித் தீர்க்கட்டும். தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள். நிர்வாகிகளின் உணர்வு என்ன? அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? அது மட்டும்தான் எனக்குத் தேவை.
டாக்டரிடம் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். இப்போது நானும் அந்த இடத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதையும் மறைக்காதீர்கள். நோய் என்னவென்று தெளிவாகத் தெரிந்தால்தான் அதற்கு மருந்து கொடுக்க முடியும். கழகத்தினர் உங்களிடம் சொல்லும் தகவல்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லக் கூடாது. அப்படி செய்தால் இந்த ஆய்வின் நோக்கமே வீணாகிவிடும். பிரச்சினைகளைச் சரிசெய்து, நம்மை மாற்றிக் கொண்டால்தான் அடுத்த 100 ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு இயங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.