“மிசா குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!”.. திருமாவளவன் சொன்ன பரபரப்பு கருத்து!!
Thirumavalavan Interview about misa: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்த கொடுமைகள், இடதுசாரி கட்சிகளின் ஆதரவு மற்றும் புதிய தலைமைச் செயலக விவகாரம் எனப் பல்வேறு அரசியல் சூழல்கள் குறித்து விரிவான விளக்கமளித்தார்
சென்னை, செப்டம்பர் 10: மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணிக்கு இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளின் முழுமையான ஆதரவு தொடர்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மிசா வீடியோ குறித்தும், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணிக்கு இடதுசாரிகளின் ஆதரவு குறித்தும் விரிவாகப் பேசினார். அந்தவகையில், நேற்று நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் கலந்துகொள்ளாவிட்டாலும், ஆட்சி தொடர்வதற்கும் கூட்டணியின் வெற்றிக்கும் தங்களது ஆதரவு உண்டு என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர் என்றார்.
இதையும் படிக்க: “கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை!”.. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!!
இடதுசாரி கட்சிகளின் ஆதரவு நீடிக்கிறது:
ஐந்தாண்டு காலத்திற்கு ஆட்சி தொடர்வதற்கு இடதுசாரி கட்சிகளின் ஆதரவு உண்டு என்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்வதில் அவர்களுக்கு எந்த நெருடலும் இல்லை. எனவே, புதிதாக உருவாகியுள்ள மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணிக்கு இரு இடதுசாரி கட்சிகளின் ஆதரவு உண்டு என்பதில் மாற்றுக் கருத்தில்லை” என்றார்.
வேட்பாளர் தேர்வு, பட்டினப்பாக்கம் திட்டம்:
வேட்பாளர்கள் தேர்வு குறித்துப் பேசிய அவர், “யாருக்கு வாய்ப்பளிப்பது என்பது குறித்த முழு அதிகாரமும் சம்பந்தப்பட்ட கட்சிக்கே உண்டு. வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெற வைப்பதா இல்லையா என்பதைத் தொகுதி மக்களே முடிவு செய்வார்கள். கூட்டணியின் அங்கமாக விசிக வேட்பாளர்களின் வெற்றிக்காகப் பாடுபடும்” எனக் கூறினார்.
அதேபோல், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தவர், “அந்த வட்டாரத்தைச் சார்ந்த பொதுமக்களின் கருத்து என்னவென்று முழுமையாகத் தெரிந்த பிறகு, தமிழ்நாடு அரசு நல்லதொரு முடிவை எடுத்து நடைமுறைப்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றார்.
அறம் சார்ந்த கூட்டணி அரசியல்:
கூட்டணி இயக்கம் குறித்துப் பேசிய திருமாவளவன், “நாங்கள் கூட்டணியில் ஓர் அங்கமாக இருப்பதால், அவ்வப்போது எங்கள் அனுபவங்களின் அடிப்படையில் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறோம். இந்த கூட்டணி அறம் சார்ந்தும், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையிலும் இயங்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருப்போம்” எனக் கூறினார்.
மிசா வீடியோ – மறைக்க முடியாத வரலாறு:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ள வீடியோ குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன், “மிசா காலத்து கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் சந்தித்த முக்கியமான தலைவர்களுள் மேனாள் முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலினும் ஒருவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அது வரலாற்றில் எப்போதும் மறைக்க முடியாத ஒரு உண்மை. திராவிட முன்னேற்றக் கழகத்தில் கைது செய்யப்பட்டு வதைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான தலைவர்களில் அவரும் ஒருவர்.
இதையும் படிக்க: சிறுமி ஹாசினி படுகொலை வழக்கு.. தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!
முன்னதாக தான் பேசிய கருத்து யாராவது மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்றும், அது உள்நோக்கத்தோடு சொல்லப்பட்டதல்ல என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சுட்டிக்காட்டியுள்ளது” எனக் குறிப்பிட்டார்.