“சுயலாபத்திற்காகவே ஆளுங்கட்சிக்குச் செல்வார்கள்”.. மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!
தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், "நாங்கள் தேர்தல் களம் கண்டபோது திமுக சார்பில் ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் உழைத்தோம். ஆனால் தற்பொழுது தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய ஆட்சி, நமது கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவால்தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
சென்னை, ஜுன் 06: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அதிமுகவின் முன்னாள் தேர்தல் வேட்பாளரான கஜா (என்ற) கஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். புதியதாகக் கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அரசியல் மேடையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மேலும் படிக்க: அதிமுகவுக்கு அடுத்த ஷாக்.. தவெக-வில் ஐக்கியமான 4 முன்னாள் அமைச்சர்கள்.. அதிரும் தமிழக அரசியல்!
“பதவிக்காகவோ, சொகுசுக்காகவோ நீங்கள் வரவில்லை”
விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், “பொதுவாக ஒரு இயக்கத்தில் இருந்து மற்றொரு இயக்கத்திற்கு மக்கள் மாறுகிறார்கள் என்றால், ஏதோ ஒரு சுயலாபத்தை அடிப்படையாக வைத்தோ அல்லது வசதிகளை மனதில்கொண்டோ ஆளுங்கட்சியை நோக்கித்தான் செல்வது வழக்கம். ஆனால் தற்பொழுது திமுக ஆளுங்கட்சியாக இல்லை, எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நீங்கள் எதிர்க்கட்சியை நோக்கி வந்துள்ளீர்கள் என்றால், நீங்கள் பதவிக்காகவோ அல்லது சொகுசாக வாழ்வதற்காகவோ வரவில்லை. இழந்த ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், தமிழ் சமுதாயத்திற்காகப் பணியாற்றவும், இந்த இயக்கத்திற்குத் துணையாக நிற்கவுமே வந்துள்ளீர்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், அதிமுகவில் பல ஆண்டுகள் விசுவாசமாகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்ட கஜேந்திரனின் நேர்மையைப் பாராட்டிய ஸ்டாலின், திமுகவிலும் அவர் அதே விசுவாசத்துடன் பணியாற்றுவார் என நம்புவதாகத் தெரிவித்தார்.
திமுகவின் நெருக்கடி நிலை:
திமுக்காரர்கள் வெற்றியைக் கண்டு வெறி கொள்வதும் இல்லை, தோல்வியைக் கண்டு தொய்ந்து போவதும் இல்லை என்று குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், 1949 முதல் கட்சி கடந்து வந்த தேர்தல் பாதையை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, 1975 ஆம் ஆண்டு நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, “ஆட்சி போனால் பரவாயில்லை, ஜனநாயகம் தான் முக்கியம்” என்று பேரறிஞர் அண்ணாவின் வழியில் நின்ற கலைஞர், சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டிப் போராடினார். அதன் விளைவாக 1976 இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதையும், 13 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்புக்கு வராமல் இருந்தபோதும் லட்சியத்தைக் கைவிடவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
“நமது தயவில்தான் தற்போதைய ஆட்சி நடக்கிறது”
தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், “நாங்கள் தேர்தல் களம் கண்டபோது திமுக சார்பில் ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் உழைத்தோம். ஆனால் தற்பொழுது தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய ஆட்சி, நமது கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவால்தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது, அதன் மூலம் பாஜகவின் மறைமுக ஆட்சி தமிழகத்திற்குள் நுழைந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே, கூட்டணிக் கட்சிகள் புதிய அரசு அமைக்க நான் வழி அனுப்பி வைத்தேன்” என்று குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: அண்ணாமலை விலகலால் பாஜக பலவீனமாகுமா? நயினார் நாகேந்திரன் நச் பதில்!
மேலும், நமது தயவோடு நடைபெற்று வரும் இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க, திமுகவினர் அனைவரும் இப்போதிலிருந்தே சபதமேற்று, உறுதியோடு தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.