தேனியில் 3 பேரை காவு வாங்க முயன்ற காதல் விவகாரம்.. பெண் கொடூர பலி.. அதிர்ச்சி சம்பவம்!
Theni Crime : தேனி மாவட்டத்தில் மகனின் காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகள் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில், தாய் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
தேனி மாவட்டம், கம்பம் திருவள்ளூர் காலனியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் ( 47 வயது) கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நாகலட்சுமி ( 40 வயது). தம்பதிக்கு பால்பாண்டி ( 22 வயது) என்ற மகன், யோகலட்சுமி ( 18 வயது) என்ற மகள் உள்ளனர். பால்பாண்டி பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே தேனியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தங்கி இருந்தார். அப்போது, பால்பாண்டிக்கும், அந்த இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அதன்படி, இருவரும் செல்போனில் பேசிக் கொள்வதும், தனிமையில் சந்தித்துக் கொள்வதுமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம், அந்த இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் கண்டித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடிப்பு
இதனால், மனம் உடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த பெண்ணின் தற்கொலைக்கு பால்பாண்டி தான் காரணம் எனக்கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கம்பத்தில் உள்ள பாண்டீஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாண்டீஸ்வரன், அவரது மனைவி நாகலட்சுமி, மகள் யோகலட்சுமி ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ளவதற்காக விஷத்தை குடித்தனர்.
மேலும் படிக்க: சதுரங்க வேட்டை பட பாணியில் நில மோசடி.. போலி ஆவணத்தால் ரூ.4 கோடிக்கு விற்பனை.. கம்பி எண்ணும் மூவர்!




மருத்துவமனையில் தாய் உயிரிழப்பு
அப்போது, அக்கம், பக்கத்தை சேர்ந்தவர்கள் தற்செயலாக பாண்டீஸ்வரன் வீட்டுக்கு சென்ற நிலையில், அவர்கள் மூவரும் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மூவரையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நாகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
தீவிர சிகிச்சையில் தந்தை- மகள்
பாண்டீஸ்வரன் மற்றும் யோகலட்சுமி ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த சம்பவம் தொடர்பாக பாண்டீஸ்வரன் உறவினர்கள் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பாண்டீஸ்வரன் மகன் பால்பாண்டியிடம் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பு
கம்பம் பகுதியில் மகனின் காதல் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், அதில், ஒரு பெண் உயிரிழந்த சம்பவமும் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திருவள்ளூரில் பரபரப்பு.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பாய்ந்தது போக்சோ சட்டம்!