திருவள்ளூரில் பரபரப்பு.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பாய்ந்தது போக்சோ சட்டம்!
Tiruvallur Youth Arrested POCSO Act : திருவள்ளூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று தனியார் விடுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை சேர்ந்தவர் நாகராஜ் ( 20 வயது). இவர், அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின்னர், அந்தப் பகுதியில் கிடைக்கும் வேலைகளை நாகராஜ் செய்து வந்தார். இவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி அறிமுகம் ஆகி உள்ளார். அதன்படி, இருவரும் சமூக வலைதளங்கள் வாயிலாக பழகி வந்த நிலையில், செல்போன் எங்களை மாற்றி கொண்டு தொலைபேசி வாயிலாகவும் பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அதன்படி, நாகராஜ் அவ்வப்போது ஊட்டிக்கு நேரில் சென்று அந்த சிறுமியை சந்தித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சிறுமியின் செல்போன் எண் மூலம் துப்பு
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால், அந்த சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஊட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சிறுமி பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தினர்.
மேலும் படிக்க: சென்னையில் பெண் காக்கிக்கு ஆண் காக்கி பாலியல் தொல்லை.. கமிஷனரிடம் பரபரப்பு புகார்.. விசாரணையில் இறங்கிய விசாகா கமிட்டி!




விடுதியில் வைத்து சிறுமி- இளைஞர் மீட்பு
இதில், சிறுமி பயன்படுத்தி வரும் செல்போன் எண்ணின் சிக்னல் குறித்து போலீசார் ஆய்வு செய்ததில், அந்த எண்ணுக்கான சிக்னல் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் காண்பித்தது. அதன்படி, போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் விடுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு, அறை எடுத்து தங்கி இருந்த நாகராஜ் மற்றும் சிறுமி ஆகியோர் இருந்தனர். உடனே, சிறுமியை மீட்ட போலீசார், நாகராஜை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டனர்.
போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது
இதில், நாகராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்ததாகவும், தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த போது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இளைஞர் நாகராஜ் மீது போக்சோ, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: சதுரங்க வேட்டை பட பாணியில் நில மோசடி.. போலி ஆவணத்தால் ரூ.4 கோடிக்கு விற்பனை.. கம்பி எண்ணும் மூவர்!