2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. சென்னையில் மாலை நேரங்களில் தொடரும் மழை..
Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 24, 2026: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றோட்டத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 24ஆம் தேதி இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை:
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மரண குழியான மழைநீர் வடிகால் பள்ளம்.. சென்னையில் பெண்ணுக்கு நேர்ந்த கதி..!
ஆகஸ்ட் 26ஆம் தேதியைப் பொறுத்தவரையில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை நிலை ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நீடிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், பெரும்பாலான இடங்களில் இயல்பை ஒட்டியே வெப்பநிலை பதிவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இயல்பை விட சற்று அதிகமான வெப்பநிலை பதிவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கொளத்தூரில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு!
தமிழகத்தில் ஒரு பக்கம் மழைக்கான வாய்ப்புகள் இருந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்தே பதிவாகி வருகிறது.
சென்னையில் மாலை நேரங்களில் தொடரும் மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 71 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. அதேபோல், சென்னையைப் பொறுத்தவரையில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.