பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை கைவிடுவதால் புதிய தொழில் நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் – உதயநிதி ஸ்டாலின்..
Udhayanidhi Stalin On Parandur Airport: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும் சூழலும் ஏற்படக்கூடும் எனவும் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
ஆகஸ்ட் 24, 2026: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை, விமான சரக்கு போக்குவரத்து மற்றும் எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு, சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து பரந்தூர் விமான நிலையத் திட்டம் திமுக அரசால் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திட்டம் தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகள் ஆய்வு செய்து அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு பெரும் நிதி – உதயநிதி:
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து – எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான…
— Udhay (@Udhaystalin) August 24, 2026
மேலும், இத்தகைய முக்கியமான அனுமதிகளைப் பெறுவதற்கான பணிகள், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பைவிட மூன்று மடங்கு அதிக இழப்பீடு வழங்குதல், மறுகுடியமர்வு உள்ளிட்ட முக்கியப் பணிகள் அனைத்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தபோதே மேற்கொள்ளப்பட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதியும் ஒதுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: “பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறது!”.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!
இவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொழில் நிறுவனங்கள் வர தயக்கம் காட்டும்:
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும் சூழலும் ஏற்படக்கூடும் எனவும் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
எனவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும், தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: கொளத்தூரில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு!
பரந்தூர் விமான நிலையத்தை கைவிடுவதாக முதல்வர் அறிவிப்பு:
முன்னதாக, இன்று சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான முந்தைய அரசின் முயற்சிகளுக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததை சுட்டிக்காட்டினார்.
விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளைப் பாதுகாப்பதற்காக மக்கள் நடத்திய போராட்டங்களுக்கு ஏற்கனவே தான் ஆதரவு தெரிவித்திருந்ததை நினைவுகூர்ந்த முதலமைச்சர் விஜய், மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக சட்டப்பேரவையில் முறைப்படி அறிவித்தார்.