மரண குழியான மழைநீர் வடிகால் பள்ளம்.. சென்னையில் பெண்ணுக்கு நேர்ந்த கதி..!
Chennai Woman Dies : சென்னை மாவட்டத்தில் தோண்டப்பட்டிருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தில் அந்த வழியாக நடந்து சென்ற பெண் ஒருவர் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்கப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் மழை நீர் வடிகால் பணிக்காக பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதில், அண்ணா நகர் பகுதியில் மழை நீர் வடிகால் பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் நேற்று பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்ததால் வடிகால் பள்ளங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில், அந்த வழியாக பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பெண் மழை நீர் நிரம்பி இருந்த வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து உயிருக்கு போராடினார். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் அந்த பெண்ணின் சத்தம் கேட்டு பள்ளத்துக்குள் பார்த்தபோது, பெண் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே, இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட முயன்ற நிலையில், பள்ளத்துக்கு அடியில் மின்சார வயர்கள் சென்றது தெரிய வந்த காரணத்தால், மின் இணைப்பை துண்டித்து விட்டு, அதன் பின்னரே அந்த பெண் மீட்கப்பட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, மயங்கிய நிலையில் இருந்த அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மேலும் படிக்க: யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞர்கள் – பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்




மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாரா
பள்ளத்துக்கு அடியில் சென்ற மின்சார வயரில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதில், உயிரிழந்த பெண்ணின் பெயர் கலாவதி என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, கலாவதியின் மகள் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் மழைநீர் வடிகால் பள்ளத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. மின்வாரிய பணிகள் நடப்பது குறித்த எச்சரிக்கை பலகைகள் வைக்கவில்லை. அரசின் அலட்சியத்தால் தான் எனது தாய் கலாவதி உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் அடிக்கடி நடக்கும் சம்பவம்
இது தொடர்பாக போலீசார் முதல் கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மழை நீர் வடிகால் பள்ளங்கள் தோண்டப்படுவதும், அந்தக் கட்டத்தில் மழை பெய்யும்போது நிரம்பும் தண்ணீரால் சிறிய பள்ளம் என நினைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விழுந்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. எனவே, அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் படிக்க: “ஆக்ரா ரயில் முதல் கூடுவாஞ்சேரி பிரியாணி அண்டா வரை!”.. கொடூர கொலையும், கண்டெடுக்கப்பட்ட பெண் உடலும்!..