‘வெற்றி பயணம்’.. மாவட்டங்களுக்கு இடையே மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!!
Vettri Payanam Free Bus Scheme: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் முழுமையாகக் கைவிடப்படுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும், பெண்களுக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவசப் பயணம் வழங்கும் 'வெற்றி பயணம்' திட்டம் அக்டோபர் 2 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
சென்னை, ஆகஸ்ட் 24: பெண்களின் சமூக மற்றும் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் ‘வெற்றி பயணம்’ என்ற புதிய விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடர்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.
புறநகர் பேருந்துகளில் கட்டணம் கிடையாது:
அந்தவகையில், பேரவையில் 110 வதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய ‘வெற்றி பயணம்’ திட்டமாக விரிவுபடுத்தப்பட உள்ளதாக அறிவித்தார். அதன்படி, தற்போது அமலில் உள்ள திட்டத்தில் மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் சாதாரண பேருந்துகளில் 40 கிலோமீட்டர் வரை மட்டுமே பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரம்புகளை உடைத்து, எக்ஸ்பிரஸ் (Express), எல்.எஸ்.எஸ் (LSS), டீலக்ஸ் (Deluxe) பேருந்துகளிலும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே இயங்கும் புறநகர், மலைப்பகுதி சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வருமான உச்சவரம்போ அல்லது பயண எண்ணிக்கையில் எவ்விதக் கட்டுப்பாடோ இன்றி இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
இதையும் படிக்க: ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்.. முதல்வர் விஜய் அறிவிப்பு
அக்.2 முதல் அமலுக்கு வரும் வெற்றி பயணம் திட்டம்:
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த ‘வெற்றி பயணம்’ திட்டத்தில் பெண்களுடன் சேர்த்துத் திருநங்கைகளும் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் உயர்கல்வி பெறவும், பெண் தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு எளிதாகச் சென்று வரவும் இத்திட்டம் மிகப்பெரிய சமூக முதலீடாக அமையும் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் தோராயமாக ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். முதல்வரின் இந்த இரு முக்கிய அதிரடி அறிவிப்புகளும் பரந்தூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.