“3 பிரதான துறைகள்… அடுக்கடுக்கான கேள்விகள்!”.. பேரவையில் இன்று ஆளும் அரசுக்கு செக் வைக்கும் எதிர்க்கட்சிகள்!!
TN Assembly Session 2026: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இத்துறைகளுக்குப் பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சொத்துவரி உயர்வு, பள்ளி மாணவர் கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
சென்னை, ஆகஸ்ட் 24: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான பொது விவாதம் மற்றும் அமைச்சர்களின் பதிலுரைகள் நிறைவடைந்துள்ளன. புதியதாகப் பொறுப்பேற்றுள்ள ஆளும் கட்சியின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்த நிலையில், தற்போது பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான துறைவாரியான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சில நாட்கள் வார இறுதி விடுமுறைக்குப் பிறகு, சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : காங்கிரஸ் இல்லையெனில் தவெக கதை முடிந்திருக்கும்.. மாணிக்கம் தாகூர் ஆவேசம்!
முக்கிய மானியக் கோரிக்கை:
இன்றைய கூட்டத் தொடரில், முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை ஆகிய பிரதான துறைகளின் கீழ் மானியக் கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன. மக்களின் அன்றாட வாழ்வியலோடும், மாநிலத்தின் எதிர்காலத்தோடும் நேரடித் தொடர்புடைய இந்தத் துறைகளில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அரசின் கவனத்தை ஈர்க்கவும், ஆளும் தரப்பிற்கு நெருக்கடி தரவும் எதிர்க்கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.
கேள்வி எழுப்ப திட்டம்:
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், மாநிலத்திலேயே அதிகபட்சமாகப் பள்ளிக் கல்வித்துறைக்குச் சுமார் ரூ.44,527 கோடியும், அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.29,863 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மிக அதிகபட்ச நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள இத்துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் இன்றைய விவாதத்தில் விரிவாக அலசப்படவுள்ளது. பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், கல்வி மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளில் சமீபகாலமாகத் தொடரும் சில சறுக்கல்களை முன்வைத்து எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்விகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளன.
இதையும் படிக்க : சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்ற முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு!
அனல் பறக்கும் விவாதக்களம்:
குறிப்பாக, நகராட்சி நிர்வாகத் துறையைப் பொறுத்தவரை அண்மைக்காலமாகப் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சொத்துவரி உயர்வு விவகாரம் மற்றும் வரவிருக்கும் மழைக்காலத்தை எதிர்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வரும் முன்எச்சரிக்கைப் பணிகள் குறித்து காரசாரமாக விவாதிக்கப்படவுள்ளது. அதேபோல, பள்ளிகளில் தவெக நிர்வாகிகள் சென்று ரீல்ஸ் எடுப்பது, திருவொற்றியூரில் பள்ளி மாணவர் படுகொலை சம்பவம், பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவிகள் மது அருந்தியதாக வெளியான செய்திகள் குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகள் எழவுள்ளன. உயர்கல்வித் துறையில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் போராட்டங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள், கோவை கல்லூரி மாணவர் கொலை வழக்கு எனப் பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இன்றைய பேரவையில் எதிரொலிக்கும் என்பதால் அவை அனல் பறக்கும் விவாதக்களமாக மாறவுள்ளது.