இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரா சீரமைத்த 120 ஆண்டு பழமையான சொகுசு மாளிகை!
Kumar Sangakkara Villa: இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரா, காலி கோட்டையில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த மாளிகையை வாங்கி, அதன் பாரம்பரியக் பழமை மாறாமல் அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு இல்லமாகச் சீரமைத்துள்ளார். பழமையையும் நவீனத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இம்மாளிகை உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்று நாயகனும், உலகப் புகழ்பெற்ற முன்னாள் வீரருமான குமார் சங்கக்காரா, தனது கிரிக்கெட் சாதனைகளுக்காக மட்டுமல்லாமல் கலை மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டினாலும் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். இலங்கையின் தென்பகுதி கடலோர நகரமான காலியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘காலி கோட்டை’ வளாகத்தில் அமைந்திருக்கும் 120 ஆண்டுகள் பழமையான வரலாற்று மாளிகை ஒன்றை வாங்கிய சங்கக்காரா மற்றும் அவரது மனைவி யஹாலி, கடந்த பல ஆண்டுகால முயற்சியால் அதனைப் பழமை மாறாமல் அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு இல்லமாகச் சீரமைத்துள்ளனர்.
மேலும் படிக்க: இலங்கையில் பேரதிர்ச்சி.. செம்மணியில் தோண்ட தோண்ட வந்த 582 மனித எலும்புக்கூடுகள்.. மரண ரகசியத்தின் பின்னணி என்ன!
சிதிலமடைந்து காணப்பட்ட காலி கோட்டை:
கடந்த 2008-ஆம் ஆண்டு காலி கோட்டைப் பகுதியில் இந்த வீட்டை அவர்கள் வாங்கியபோது, அது மிகவும் சிதிலமடைந்து, மோசமான நிலையில் காணப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட காலி கோட்டையின் பழமையான கட்டுமான முறைகளுக்கும், அதன் அடையாளத்திற்கும் எந்தவித சேதமும் ஏற்படுத்தாமல், அதேவேளையில் நவீன வாழ்வியலுக்கு ஏற்ப அதனை மாற்றுவது அவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. இதற்காகக் கட்டிடக் கலைஞர்கள் ஜீவன் டிசூசா, முராத் இஸ்மாயில் மற்றும் உட்புற வடிவமைப்பாளர் அன்னிகா பெர்னாண்டோ ஆகியோரை உள்ளடக்கிய நிபுணர் குழுவை அழைத்து, பல ஆண்டுகள் மெத்தப் படித்து இந்தச் சீரமைப்புப் பணியை மேற்கொண்டனர்.
சீரமைப்பில் மேற்கொண்ட சுவாரஸ்யம்:
பழைய சுவர்களையும், பவளக் பாறை கட்டுமானங்களையும் அப்படியே வெளிப்படுத்தி, அதன் மீது நவீனத் தொடுதல்களைக் கொடுத்தது இக்கட்டிடத்தின் தனித்துவமாகும். இந்தச் சீரமைப்பில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இலங்கை கலைஞர் பிரகீத் மனோஹன்சா உருவாக்கிய மிகப்பெரிய சிற்பம் ஒன்றை வீட்டிற்குள் நிறுவத் திட்டமிட்டனர். ஆனால், அச்சிற்பம் வீட்டின் எந்தக் கதவு வழியாகவும் உள்ளே செல்ல முடியாத அளவுக்குப் பெரியதாக இருந்தது. இதனால், சீரமைப்புப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே அச்சிற்பத்தை வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்துவிட்டு, அதன்பிறகு அதைச் சுற்றி வீட்டின் வடிவமைப்பை அமைத்தனர்.
மேலும் படிக்க: பழைய வீட்டை சீரமைக்கும்போது கிடைத்த புதையல்.. ரூ.98 கோடி மதிப்பு.. ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்!
நவீன வசதிகளுடன் கூடிய இல்லம்:
தற்போது இம்மாளிகை 4 படுக்கையறைகள், 3 முற்றம் கொண்ட தோட்டங்கள் மற்றும் காலி கலங்கரை விளக்கத்தின் அழகிய தோற்றத்தைக் காணக்கூடிய கூரை மேல் நீச்சல் குளம் என அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய குடும்ப இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. ‘ஆஸ்திரேலியாவின் ஏபிசி’ ஊடகத்தின் ‘கலாச்சாரமும் வடிவமைப்புப் பிரிவும்’ இதழில் இம்மாளிகை பற்றிய செய்திகள் வெளியாகி உலகளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது அதை அருங்காட்சியகமாக மாற்றுவது மட்டுமல்ல, அதற்குப் புதிய உயிர் கொடுத்து நவீன காலத்திற்கு ஏற்பப் பயன்படுத்துவதுதான் என்பதை சங்கக்காரா தம்பதியினர் நிரூபித்துள்ளனர்.