“பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறது!”.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!
CM Vijay Drops Parandur Airport Project: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் முழுமையாகக் கைவிடப்படுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும், பெண்களுக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் இலவசப் பயணம் வழங்கும் 'வெற்றி பயணம்' திட்டம் அக்டோபர் 2 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
சென்னை, ஆகஸ்ட் 24: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். அதன்படி, 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவித்ததாவது, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் புதிய விமான நிலையம் அமைக்க முந்தைய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாக குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: ‘வெற்றி பயணம்’.. மாவட்டங்களுக்கு இடையே மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
திட்டத்தை முழுமையாக கைவிடுவதாக அறிவிப்பு:
விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளைப் பாதுகாப்பதற்காக மக்கள் நடத்திய போராட்டங்களுக்குத் தாம் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்ததை நினைவுகூர்ந்த முதல்வர், மக்கள் நலனை முதன்மையாக கொண்டு பரந்தூர் திட்டத்தை முழுமையாக கைவிடுவதாக பேரவையில் முறைப்படி அறிவித்தார். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் கைவிடப்படுவதைத் தொடர்ந்து, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
துறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்துத் தேர்வு செய்யப்பட்டுள்ள இவ்விடங்களில் தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றார்.
இதையும் படிக்க: ஆண்டுக்கு 3 விலையில்லா சிலிண்டர்.. முதல்வர் விஜய் அறிவிப்பு
விமான நிலையத்தில் புதிய முனையம்:
இதற்கிடையே, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில், ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் இணைந்து புதிய ‘டெர்மினல் 5’ பயணிகள் முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் புதிய விமான நிலையம் தயாராகும் வரை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் மொத்தப் பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 55 மில்லியனாக உயர்த்தப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.