எல் நினோ கண்காணிக்க குழு – தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உள்ளிட்ட 7 நிபுணர்கள்..
எல் நினோ தாக்கத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு குறைதல், கடும் வெப்பம், வறட்சி அல்லது சில இடங்களில் அதிக மழைப்பொழிவு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்று வானிலை நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், அவற்றை அறிவியல் அடிப்படையில் கண்காணித்து பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 30, 2026: தமிழகத்தில் வலுப்பெற்று வரும் எல் நினோ (El Niño) பருவநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரைப்பதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயர்மட்டக் குழுவில், பருவநிலை மாற்றம், வானிலை, நீர் மேலாண்மை மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளில் அனுபவம் வாய்ந்த ஏழு நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரைப்பதற்காக சிறப்புக் குழு:
இந்தக் குழுவில் அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றத் துறைத் தலைவர் காமினி, சென்னை ஐஐடி நீர் மேலாண்மைத் துறை பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு உறுப்பினர் அறிவுடை நம்பி அப்பாதுரை, தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் ஆலோசகர் ரமேஷ் ராமச்சந்திரன், வானிலை ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் வெட்டிப் படுகொலை.. நடுநடுங்க வைக்கும் கொடூரம்!!
தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய மழைப்பொழிவு மாற்றங்கள், வறட்சி நிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய காலநிலை மாற்றங்களை தொடர்ந்து கண்காணிப்பது இந்தக் குழுவின் முக்கியப் பொறுப்பாக இருக்கும். மேலும், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமைக்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ஆலோசனைகளை வழங்கவும் குழுவுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் செயல்பாடுகள் என்ன?
அதுமட்டுமல்லாமல், வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை உரிய நேரத்தில் எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் குழு வழங்கும்.
மேலும் படிக்க: சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்.. விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு..
பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வறட்சி தடுப்பு நடவடிக்கைகள், வெள்ளத் தடுப்பு மற்றும் வெள்ளத்தணிப்பு நடவடிக்கைகள், நீர் வள மேலாண்மை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் தயார்நிலை தொடர்பாக அரசுக்கு விரிவான ஆலோசனைகளை வழங்குவதும் இந்தக் குழுவின் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.
தீவிரமாகும் எல்-நினோ தாக்கம்:
எல் நினோ தாக்கத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு குறைதல், கடும் வெப்பம், வறட்சி அல்லது சில இடங்களில் அதிக மழைப்பொழிவு போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்று வானிலை நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், அவற்றை அறிவியல் அடிப்படையில் கண்காணித்து பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு 2026–2027 மற்றும் 2027–2028 ஆகிய இரண்டு ஆண்டுகள் செயல்படும் என்றும், அந்தக் காலகட்டத்தில் எல் நினோ தாக்கம் தொடர்பான ஆய்வு, கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.