தமிழக சுங்கச்சாவடிகளில் உள்ளூர் பாஸ் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு.. பின்னணி என்ன?
NHAI Hikes Local Monthly Pass Fee: தமிழக சுங்கச்சாவடி உள்ளூர் பாஸ் கட்டணம் உயர்வு 2026 மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. 4 மாதங்களில் 3வது முறையாகக் கட்டணம் ரூ.360 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
சென்னை, ஜூலை 26: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் உள்ளூர்வாசிகளுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் மீண்டும் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு, வெறும் 4 மாத இடைவெளிக்குள் 3-வது முறையாக இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தினசரி பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: கன்னத்தில் கை வைத்தது குற்றமா? எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு பளார்.. மு. க. அழகிரி மகள் மீது வழக்கு பதிவு!
கட்டண உயர்வு பட்டியல் – எப்படி உயர்ந்தது?
சுங்கச்சாவடியிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்களின் தனிநபர் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் கடந்த சில மாதங்களில் கீழ்க்கண்டவாறு படிப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மார்ச் 31 2026 வரை மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.330ஆக இருந்தது, ஏப்ரல் 1 முதல் ரூ.10 உயர்ந்து, உயர்ந்து ரூ.340ஆகவும், மே.23ம் தேதி மீண்டும் ரூ.10 உயர்ந்து, ரூ.350ஆகவும் இருந்தது. இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக இன்று முதல் மேலும் ரூ.10 உயர்ந்து, ரூ.360ஆக உள்ளது. அதாவது, மொத்தமாக கடந்த 4 மாதங்களில் மட்டும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.30 வரை உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.360-ஐ எட்டியுள்ளது.
எந்தெந்த சுங்கச்சாவடிகளில் அமல்?
தமிழ்நாட்டில் இயங்கி வரும் 77 தேசிய நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவற்றில் புதிய கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, சென்னை பைபாஸில் உள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகள், தாம்பரம் – திண்டிவனம் பாதையில் உள்ள பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் நெடுஞ்சாலைகளில் உள்ள பிரதான சுங்கச்சாவடிகள் இதில் அடங்கும்.
ஆண்டுக்கு ரூ.300 கூடுதல் செலவு:
வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து உயர்த்துவது தங்களை மிகக் கடுமையாகப் பாதிப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இந்தத் தொடர் உயர்த்தலால் ஒரு வாகனத்திற்கு ஆண்டுக்குக் கூடுதலாக ரூ.300 முதல் ரூ.360 வரை செலவாகும். தங்களின் வருடாந்திரச் சுங்கச் செலவே ரூ.4,300-ஐத் தாண்டிச் செல்வதால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உடனடியாக இந்த உயர்வைக் திரும்பப் பெற வேண்டும் என வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க: தந்தை கண்முன்னே சோகம்.. திருவண்ணாமலை அருகே தனியார் பேருந்து மோதி விபத்து.. கல்லூரி மாணவி பரிதாப பலி!
அடிக்கடி உயர்த்தப்படுவது ஏன்?:
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய விதிமுறைகள் (2008)-ன் படி, மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கத் தரவுகளைக் கொண்டே சுங்கக் கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றன. மத்திய நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, பணவீக்கக் குறியீட்டில் ஏற்படும் மாற்றங்களைச் உடனடியாகச் சரிக்கட்டவே இந்த கூடுதல் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கார்களுக்கான ஒற்றைப் பயணக் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும், திரும்புதல் பயணம் மற்றும் கனரக வணிக வாகனங்களுக்கான சுங்கக் கட்டணமும் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது.