Tamil Nadu Budget 2026: சென்னையில் 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு; விரைவில் திட்ட அறிக்கை.. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு..
Tamil Nadu Budget : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூன்று புதிய வழித்தடங்களுக்கான திட்ட அறிக்கைகளை தயாரித்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை விரைவாகவும், போக்குவரத்து நெரிசல் இன்றியும் சென்றடைய முடியும்.
ஆகஸ்ட் 5, 2026: 2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் புதிய வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பள்ளிக்கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை மேலும் விரிவுபடுத்தும் திட்டமும் முக்கிய இடம் பெற்றுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் – 3 புதிய வழித்தடம்:
அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் சேவையை மூன்று புதிய வழித்தடங்களில் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) விரைவில் தயாரிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதிலும், விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதிலும் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் நீண்ட தூர பயணிகள் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது சென்னையில் நீல வழித்தடம் (Blue Line) மற்றும் பச்சை வழித்தடம் (Green Line) ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை விரைவாக நிறைவு செய்ய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அறிவிப்புகள் விவரம்!
முக்கியத்துவம் என்ன ?
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூன்று புதிய வழித்தடங்களுக்கான திட்ட அறிக்கைகளை தயாரித்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை விரைவாகவும், போக்குவரத்து நெரிசல் இன்றியும் சென்றடைய முடியும்.
இதேபோல், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரை புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இது மேற்கு சென்னை, ஆவடி மற்றும் பட்டாபிராம் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: சென்னை கூவத்தில் படகு சவாரி.. சுத்தப்படுத்த சர்வதேச டெண்டர்.. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
மேலும், பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றியுள்ள தொழிற்பேட்டைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் எதிர்காலத்தில் அமையவுள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்துடன் இணைப்பை மேம்படுத்தும் முக்கிய திட்டமாக கருதப்படுகிறது.
இந்த மூன்று புதிய மெட்ரோ ரயில் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்தால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து வசதி மேலும் மேம்படுவதுடன், தினசரி லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.