Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தைப்பூசம் – சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே – எப்போ தெரியுமா?

Special Trains for Thai Poosam : தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 1, 2026 அன்று தை பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் பக்தர்கள் முருகர் கோவிலுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தைப்பூசம் – சிறப்பு ரயில்களை அறிவித்த தெற்கு ரயில்வே – எப்போ தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Jan 2026 19:00 PM IST

சென்னை, ஜனவரி 29 : தமிழ் கடவுளான முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் கொண்டாடும் முக்கிய விழாவாக தைப்பூசம் (Thai Poosam) கருதப்படுகிறது. ஆண்டுதோறும் தைப்பூசம் நாளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த நிலையில், பிப்ரவரி 1, 2026 அன்று தைப்பூசம் திருவிழா நடைபெறவுள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் பயணம் செய்ய வசதியாக, தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை (Special Train) ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பழனி முருகன் கோவில், திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமி மலை போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களில் அதிக அளவில் மக்கள் கூடும் என்பதால் பயணிகளின் நெரிசலை தவிர்க்கும் நோக்கில் இந்த சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள்

தைப்பூசம் திருவிழா நேரத்தில் வழக்கமான ரயில்கள் மட்டும் போதுமானதாக இருக்காது என்பதால், சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் கூட்ட நெரிசல் குறையும் மற்றும் பக்தர்கள் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தைப்பூசத்தை முன்னிட்டு, ரயில் எண் 06001 என்ற சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில், ஜனவரி 30, 2026 அன்று வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் திருநெல்வேலிக்கு காலை 11.15 மணிக்கு சென்றடையும். இந்த ரயில், தைப்பூசத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் முருக பக்தர்களுக்கு ஏதுவாக இருக்கும்.

இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

இதனையடுத்து பயணிகள் ஊர் திரும்புவதற்காக ரயில் எண் 06002, ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1, 2026 அன்று இரவு 10.35 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அதேபோல், தாம்பரம் – தூத்துக்குடி – சென்னை பீச் வழித்தடத்திலும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

 

இதையும் படிக்க : தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்?..எப்போது தாக்கல் செய்யலாம்…அரசு தீவிர ஆலோசனை!

அதன் படி, ரயில் எண் 06003, ஜனவரி 31, 2026 அன்று சனிக்கிழமை, இரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இந்த ரயில், திருச்செந்தூர் முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல தரிசனம் முடித்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக ரயில் எண் 06004,
ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 1, 2026 அன்று இரவு 11.55 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு சென்னை பீச் ரயில் நிலையம் சென்றடையும்.

தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள், பக்தர்கள் பாதுகாப்பாகவும் நெரிசலின்றியும் பயணம் செய்ய உதவும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்து, ரயில்வே விதிமுறைகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.