கரூர் சம்பவத்தில் தலைதெறிக்க தனி விமானத்தில் ஓடியது யார்? முதல்வர் மீது செந்தில்பாலாஜி கடும் விமர்சனம்!
Senthil Balaji Criticized Vijay About Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பார்க்காமல், நலம் விசாரிக்காமல் தனி விமானத்தில் தலை தெறிக்க சென்னை ஓடியது யார் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூர் கம்பெனி ஓனர் ஓடு ஓடுனு ஓடிக்கிட்டு இருக்காரு என்று வேட்டைக்காரன் பட பாடலை பாடி செந்தில் பாலாஜியை மறைமுகமாக முதல்வர் விஜய் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், அவரது விமர்சனத்திற்கு பதிலடி தரும் விதமாக செந்தில் பாலாஜி சமூக வலைதளங்களை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2025- ஆம் ஆண்டு செப்டம்பர் 27- ஆம் தேதி கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார். எனது கரூர் சொந்தங்களுக்கு இரவு, பகல் பாராமல் களத்தில் நின்று உதவியவர் யார். கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் உடனடியாக உயர் சிகிச்சை கிடைக்க அனைத்து வகையான ஏற்பாடுகளையும் செய்தது யார்.
தண்ணீர் பாட்டிலை வீசி பேச்சை தொடர்ந்தவர் யார்
அவர்களின் உயிரை காத்து துயர் துடைத்தவர்கள் அப்போதைய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் அப்போதைய துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான். அன்றைய கூட்டத்தில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையில் தண்ணீர் பாட்டிலை மட்டும் வீசிவிட்டு ஆம்புலன்சை வர சொல்லிவிட்டு மக்களை காப்பாற்றாமல் தனது பேச்சை தொடர்ந்து பேசியவர் யார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கரூரில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சென்றவர் யார்.
மேலும் படிக்க: “என் வாழ்நாளில் மறக்க முடியாத ஆறாத வடு கரூர் சம்பவம்!”.. முதல்வர் விஜய் ஆவேச பேச்சு!!




தனி விமானத்தில் தலைதெறிக்க ஓடியது யார்
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அத்தனை பேர் உயிரிழந்துள்ளதாக கூறியும், பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமல், தனி விமானத்தில் சென்னை ஓடியது யார் என்பது கரூர் மக்களுக்கு நன்றாக தெரியும். ஓடு.. ஓடு.. ஓடு.. என்று அந்த பதிவில் செந்தில் பாலாஜி முதல்வர் ஜோசப் விஜய்யை மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
செந்தில்பாலாஜியை மறைமுகமாக விமர்சித்த விஜய்
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மக்கள் சிந்திப்பு ஆகியவற்றில் முதல்வர் விஜய் பங்கேற்று பேசி இருந்தார். அப்போது, கரூர் கம்பெனி ஓனர் என்று செந்தில் பாலாஜியை மறைமுகமாக குறிப்பிட்ட முதல்வர் விஜய் காவல் விசாரணைக்கு ஆஜராகாமல் ஓடு.. ஓடு.. ஓடு.. என்று ஓடுகிறார் என்று கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!