உச்சநீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜி.. கேவியட் மனு தாக்கல் செய்து செக் வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், வழக்கின் முக்கிய தகவல்களை சேகரிப்பதற்காக செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜூலை 31, 2026: டாஸ்மாக் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதாவது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்:
2021 முதல் 2026ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான ஒப்பந்தங்கள் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் முறைகேடு செய்து, சுமார் ரூ.17 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் மற்றும் விசாரணை முற்படையைச் சேர்ந்த 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும் படிக்க: “முதலில் மின்வெட்டு.. இப்போது மின்கட்டண உயர்வு!”.. தவெக ஆட்சியில் குளறுபடிகள்.. மு.க.ஸ்டாலின் சாடல்!!
இது தொடர்பாக தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை சுமார் 45 இடங்களில் சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து செந்தில் பாலாஜி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்:
இந்தச் சூழலில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், வழக்கின் முக்கிய தகவல்களை சேகரிப்பதற்காக செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்தார். அதன்படி, உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை அவசர வழக்காக விசாரணைக்கு வர உள்ளது.
மேலும் படிக்க: 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் எப்படி?
செந்தில் பாலாஜிக்கு எதிராக கேவியட் மனு:
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையும் செந்தில் பாலாஜிக்கு எதிராக கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதத்தையும் விளக்கத்தையும் கேட்காமல் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் அல்லது வேறு எந்தவொரு இடைக்கால உத்தரவையும் வழங்கக் கூடாது என்று கோரப்பட்டுள்ளது.
நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கப்படாவிட்டால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.