2 நாட்களாக வராத நிலையில் திடீர் திருப்பம்!.. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்!
Senthil Balaji Appears at Triplicane Police Station: தவெக எம்.எல்.ஏக்கள் பேரம் பேசப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2 நாட்களாகக் கையெழுத்திட வராத நிலையில், இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திடீரென நேரில் ஆஜராகிக் கையெழுத்திட்டுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 01: தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த இரண்டு நாட்களாகக் காவல் நிலையத்தில் ஆஜராகாத நிலையில், இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திடீரென நேரில் ஆஜராகிக் கையெழுத்திட்டுள்ளார்.
இதையும் படிக்க: “சிக்கன் பிரியாணி சாப்பிட்டா குழந்தைங்க கெட்டுப்போயிடுவாங்களா?”.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
காவல் நிலையத்தில் ஆஜராக தாமதம் ஏற்பட்டது ஏன்?
தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் நிபந்தனைப்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அவர் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருந்தார்.
இது குறித்துச் செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்ததால், அது தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்காகச் செல்ல வேண்டியிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைத்த போதிலும், மருத்துவச் சிகிச்சை காரணமாக ஆஜராக இயலவில்லை எனக் கூறப்பட்டது.
‘தலைமறைவு’ நெருக்கடியைத் தவிர்க்கத் திடீர் ஆஜர்:
காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுவதிலிருந்து 6 நாட்கள் விலக்கு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமைதான் நீதிமன்றத்திற்கு வரவுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தால், காவல்துறையினரால் ‘தலைமறைவு’ எனக் கருதப்பட்டு மேலும் சட்ட ரீதியான நெருக்கடிகள் ஏற்படும் என்பதால், இன்று 3-வது நாளில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட்டுள்ளனர். இரண்டு நாட்கள் ஆஜராகாததற்கான காரணம் குறித்துத் திருவல்லிக்கேணி காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி வேட்டை:
அதே வேளையில், டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கரூரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் மொத்தம் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியைத் தவிர மற்ற அனைவரும் தலைமறைவாக உள்ளனர். தலைமறைவாக உள்ள நபர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: தாய் என்றும் பார்க்கவில்லை.. தம்பி என்றும் நினைக்கவில்லை.. ரூ.1 கோடிக்காக அண்ணா நகரில் அரங்கேறிய இரட்டை கொலை!
அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் கரூரைச் சேர்ந்த ரத்தேஷ், விசாகன் ஆகியோரின் தொடர்புகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.