“ஆட்சி நடக்கவில்லை.. ரீல்ஸ் மட்டும் தான் ஓடுது!”.. முதல்வர் விஜய்யை சரமாரியாக தாக்கிய சீமான்!
Seeman Slams CM Vijay: மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புகளைக் கடுமையாகச் சாடினார். கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியும் அரசு வேலையும் வழங்கியதை விமர்சித்த அவர், 70 லட்சம் பட்டதாரிகள் வேலைக்காகக் காத்திருக்கும் சூழலில் அரசு வேலை இவ்வளவு இழிவாக மதிப்பிடப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினார்.
மதுரை, செப்.02: மாவீரன் பூலித்தேவன், தமிழ்த்தேசியப் புரட்சியாளர் தமிழரசன் மற்றும் அனிதா ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள், நீட் தேர்வின் பின்னணியில் உள்ள முறைகேடுகள் மற்றும் மாநிலத்தில் நடைபெறும் அசம்பாவிதங்களுக்குச் சிபிஐ விசாரணை கோரும் அரசியல் போக்குகள் குறித்துத் தனது வழக்கமான அதிரடி பாணியில் மிகக் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. கோவையில் கணக்கெடுப்பில் இறங்கிய அதிகாரிகள்.. விரைவில் தங்க மழை!
ஆட்சி நடக்காது.. வெறும் ரீல் தான் ஓடும்:
🔴தற்போது நேரலையில்…
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன், தமிழ்த்தேசியப் பேரொளி அண்ணன் தமிழரசன், அன்புத்தங்கை அனிதா ஆகியோரின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக மூவர் நினைவைப் போற்றும் கூட்டம் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை – திருமோகூர் சாலையில் உள்ள…
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) September 1, 2026
பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தமிழக ஆட்சியை நேரடியாகக் கடுமையாகத் சாடினார். “ஐந்து ஆண்டுகளில் இங்கு உண்மையான ஆட்சி எதுவும் நடக்கப்போவதில்லை, வெறும் காட்சி மட்டுமே நடக்கும். இங்கு ‘ரூல்’ இருக்காது, வெறும் ‘ரீல்’ தான் ஓடும்” என எள்ளி நகையாடினார். மக்கள் சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கோ அல்லது சமூகப் போராட்ட தியாகிகளின் கனவுகளுக்கோ முன்னுரிமை அளிக்காமல், விளம்பர அரசியலிலும் ரீல்ஸ் போடுவதிலுமே கவனம் செலுத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
நீட் தேர்வு முறை ஒரு மிகப்பெரிய மோசடி:
அனிதாவின் தியாகத்தையும் அவரது கல்விக்கனவையும் நினைவுகூர்ந்த சீமான், நீட் தேர்வு முறை என்பது மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் ஒரு ‘ஃபிராடு’ திட்டம் எனச் சாடினார். 12-ஆம் வகுப்பில் 1190-க்கு மேல் அதிக மதிப்பெண் பெறும் திறமையான மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்காமல், நுழைவுத் தேர்வில் சில குறிப்பிட்ட மதிப்பெண்களைப் பெறும் நடைமுறைப் பிழைகளைச் சுட்டிக்காட்டினார். பள்ளிக் கல்வியின் மதிப்பை முற்றிலும் குறைத்துவிட்டு, தனியார் பயிற்சி மையங்களுக்கு சாதகமாகச் செயல்படும் இந்தத் தேர்வு முறையால் கல்வி வணிகமாக்கப்பட்டு ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு பறிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
நிவாரண நிதியும் அரசு வேலை வழங்கலும்:
கரூரில் நடைபெற்ற சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் அரசு வேலையும் வழங்கப்பட்டதை நேரடியாகச் சுட்டிக்காட்டி விமர்சித்தார். “பிரபல நடிகராக இருந்து கட்சித் தொடங்கி முதலமைச்சரான பிறகு, தன்னை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு 20 லட்சம் நிவாரணமும் அரசு வேலையும் கொடுத்துவிட்டால் வழக்கு விசாரணையில் என்ன தீர்ப்பு வரும்?” என கேள்வி எழுப்பினார். மேலும், இச்சம்பவம் குறித்துச் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற அறிவிப்புகள் வழக்கின் போக்கையும் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களையும் திசைதிருப்பவே பயன்படும் என்று குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க: முதலமைச்சரான பின் முதல் வெளிநாட்டு பயணம்.. லண்டனில் முதலீட்டாளர்களை சந்திக்கும் CM விஜய்!
70 லட்சம் பட்டதாரிகளின் எதிர்காலம் என்ன?
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதிவிட்டு சுமார் 70 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி காத்துக்கொண்டிருக்கும் அவலநிலையைச் சுட்டிக்காட்டினார். படித்துவிட்டு தகுதியுடன் பயிற்சி எடுத்து காத்துக்கொண்டிருக்கும் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வழங்காத நிலையில், இதுபோன்ற சம்பவங்களில் உடனடியாக அரசு வேலைகள் தூக்கிக் கொடுக்கப்படுவதன் மூலம் அரசு வேலையின் மதிப்பையே இழிவுபடுத்துவதாகச் சாடினார். மேலும், முதலாவது மாநாட்டில் 7 பேர் இறந்தபோதும், மதுரை மாநாட்டில் 3 பேர் இறந்தபோதும் வழங்கப்படாத நிவாரணம், கரூரில் மட்டும் வழங்கப்படுவதன் பின்னணியில் அரசியல் சுயலாபமே ஒளிந்திருக்கிறது என்றார்.