தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு.. தன்னிச்சையாக உயர்த்திய உரிமையாளர்கள்.. பயணிகள் அதிர்ச்சி!
Private Bus Ticket Fare Hike : தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தை அத ன் உரிமையாளர்கள் தன்னிச்சையாக உயர்த்தி உள்ளனர். இதில், எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை ரூ. 5 வரை அதன் உரிமையாளர்கள் திடீரென தன்னிச்சையாக உயர்த்தி உள்ளனர். இது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சென்னை, நாகர்கோவில், ஊட்டி, மதுரை ஆகிய பகுதிகளை தவிர்த்து பல்வேறு இடங்களில் சுமார் 4,600 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் கடந்த 2018- ஆம் ஆண்டுக்கு பின்னர் உயர்த்தப்படவில்லை. தற்போது, எரிபொருள் மற்றும் பேருந்துகளின் உதிரி பாகங்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், தனியார் பேருந்து தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, டீசல் விலை உயர்வுக்கு ஏற்றவாறு தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ரூ.2 முதல் ரூ. 5 வரை டிக்கெட் கட்டணம் உயர்வு
ஆனால், தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை மீது தமிழக அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் திடீரென தன்னிச்சையாக பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர், இதில், கடலூர், வேலூர், கரூர் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இயக்கப்பட்டு வரும் ஒரு சிலர் தனியார் பேருந்துகளில் அதன் நிறுவனங்கள் ரூ. 2 முதல் ரூ. 5 வரை டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
மேலும் படிக்க: மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. க்யூ ஆர் கோடுடன் வாகன நிறுத்துமிடம்!




வேறு வழியில்லாமல் டிக்கெட் கட்டணம் உயர்வு
இது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில், தனியார் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தமிழக அரசு செயல்படுத்துவதற்கு தாமதம் செய்து வருகிறது. இது தனியார் பேருந்துகள் உரிமையாளர்களுக்கு கவலை அளித்துள்ளது. எனவே, வேறு வழியின்றி ஒரு சில தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை
அவர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அந்த தீர்வை ஏற்று தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் வழக்கமான கட்டணத்தை வசூலிக்கின்றனர் என்று தெரிவித்தனர். இந்த விவரம் தமிழக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் கவனத்திற்கு சென்றது. அதற்கு, இது தொடர்பாக முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்குமா? அடுத்தடுத்து தாக்கலாகும் தேர்தல் தடை மனுக்கள்.. பின்னணி என்ன!