“அடுத்த ஜென்மத்தில் வேண்டாம், இப்போதே விவசாயியாக மாறுங்கள்!”.. முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கோரிக்கை!
Tamilnadu Agriculture Budget 2026: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டைக் கடுமையாகச் சாடிய பிரேமலதா விஜயகாந்த், 100 நாள் வேலைத் திட்டம், திறந்தவெளி நெல் கிடங்குகள் & கள்ளு இறக்கும் உரிமை குறித்து காரசாரமாக தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். அதோடு, முதல்வர் விஜய் குறித்தும் விமர்சித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 06: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-2027ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் நாள் வேளாண்மை நிதிநிலை அறிக்கை குறித்துத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துக் கடுமையாக விமர்சித்துப் பேட்டியளித்தார். பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வாசிக்கப்பட்டிருந்தாலும், அவை ஏட்டுச் சுரையக்காயாக இல்லாமல் உண்மையான செயல்வடிவம் பெற வேண்டும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் புதுமையான அறிவிப்புகள் எதுவும் இதில் இடம் பெறவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: திமுகவில் மற்றொரு கைது? முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்.. செப். 2 வரை நீதிமன்றம் கெடு!
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஏமாற்றம்:
கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியமான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் கட்சிப் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்ற அறிவிப்பு இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அறுவடை செய்யப்பட்ட நெல் கதிர்கள் சேமிப்புக் கிடங்குகள் (Godowns) இல்லாததால் திறந்தவெளியில் மூட்டை மூட்டையாக வைக்கப்பட்டுக் மழையில் நனைந்து முளைவிட்டு நாசமாகின்றன. இதைத் தடுக்கப் பாதுகாப்பான நவீனச் சேமிப்புக் கிடங்குகளை அமைப்பதற்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.
தரிசு நிலங்கள் & கருவேலை மரங்கள் அகற்றம்:
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களில் கருவேலை மரங்கள் மட்டுமே மண்டிக்கிடக்கின்றன. இவற்றைச் சீர்படுத்தி, நிலமில்லா ஏழை விவசாயிகளுக்குக் குறைந்த குத்தகைக்கு விட்டு விளைநிலங்களாக மாற்றும் புதுமையான திட்டங்களை அரசு அறிவித்திருக்க வேண்டும்.
இயற்கை விவசாயம் & ஏற்றுமதி வாய்ப்புகள்:
ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் இந்திய உணவுப் பொருட்களை வெளிநாடுகள் இறக்குமதி செய்ய மறுக்கின்றன. இயற்கை உரங்கள் மற்றும் ஆரோக்கியமான சாகுபடி முறைகளை ஊக்கப்படுத்தி, விவசாயிகளின் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
நலிவடைந்த ஆலைகள் சீரமைப்பு:
மாவட்டந்தோறும் நலிவடைந்து மூடப்பட்டுள்ள கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள், ஜவுளி ஆலைகள், மரவள்ளிக்கிழங்கு மற்றும் சோளம் சார்ந்த தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க வேண்டும். இதன் மூலம் உள்ளூரிலேயே இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், மாவட்டங்களுக்கு இடையிலான இடப்பெயர்வும் தவிர்க்கப்படும்.
கள்ளுக்கான தடைநீக்கம்:
பனை மற்றும் தென்னை விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான கள்ளு இறக்கும் உரிமையை வழங்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட தென்னங் கள்ளையும் இளநீரையும் ஊட்டச்சத்துப் பானமாக மாற்றிக் கடைகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிக்க: 6 நிமிடம் முதல்வரை புகழ்ந்த அமைச்சர்.. கொதித்த திமுக எம்.எல்.ஏக்கள்.. எண்ட் கார்டு போட்ட சபாநாயகர்!
முதலமைச்சருக்கு காரசார பதில்:
“அடுத்த ஜென்மத்தில் நான் விவசாயியாகப் பிறக்க வேண்டும்” என்று முதலமைச்சர் கூறியதற்குப் பதிலளித்த பிரேமலதா, “நாங்கள் எல்லாம் உண்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். முதலமைச்சர் அடுத்த ஜென்மத்திற்காகக் காத்திருக்கத் தேவையில்லை; மக்கள் அதிகாரம் கொடுத்திருக்கும் இந்த ஜென்மத்திலேயே, இப்போதே ஒரு விவசாயியாக மாறி விவசாயிகளுக்கு நன்மைகளைச் செய்யுங்கள்!” எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.