6 நிமிடம் முதல்வரை புகழ்ந்த அமைச்சர்.. கொதித்த திமுக எம்.எல்.ஏக்கள்.. எண்ட் கார்டு போட்ட சபாநாயகர்!
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் பட்ஜெட் உரையின் தொடக்கப் பகுதியை விட்டுவிட்டுத் தொடர்ந்து கவிதைகளையே வாசித்துக்கொண்டிருந்த போது, அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, குறுக்கிட்ட சபாநாயகர், 'அறிக்கையை மட்டும் விரிவாகப் படியுங்கள்' என தெரிவித்தார். இவ்வாறு பட்ஜெட் தொடக்கத்திலேயே சட்டப்பேரவையில் விறுவிறு சம்பவம் நிகழந்தது.
சென்னை, ஆகஸ்ட் 06: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், தனது உரையின் தொடக்கத்தில் உழவுத் தொழிலின் சிறப்புகளையும், முதலமைச்சரின் பெருமைகளையும் கவிதைகளாகவும், இலக்கிய மேற்கோள்களாகவும் அடுக்கிக் கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் அமைச்சர் கவிதை வாசிப்பதைத் தொடர்ந்து நீடித்ததால், “அறிக்கையை மட்டும் விரிவாகப் படியுங்கள்” என்று சபாநாயகர் குறுக்கிட்டு முடிவுக்குக் கொண்டுவந்த சுவாரசியமான சம்பவம் சட்டமன்றத்தில் அரங்கேறியது.
இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 LIVE: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அப்டேட்ஸ்!
திருக்குறள் வரிகளுடன் தொடக்கம்:
வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசத் தொடங்கிய அமைச்சர், திருக்குறளின் “உழுவார் உலகத்தார்க்கு ஆணி…” என்ற குறளையும், கவிச்சக்கரவர்த்தி கம்பரின் “உலகெல்லாம் ஒளிவிளங்கும் உழவர் உழும் உழவாலே…” என்ற வரிகளையும் மற்றும் அவ்வையாரின் பாடல் வரிகளையும் மேற்கோள் காட்டி உழவுத் தொழிலின் உன்னதத்தைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
முதலமைச்சருக்கு புகழாரம்:
தொடர்ந்து முதலமைச்சரைப் போற்றிப் புகழ்ந்து அடுக்கடுக்கான கவிதை வரிகளை அமைச்சர் வாசித்தார். “பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயக முதல்வர் நீங்கள்! திரைமன்றங்களில் மட்டுமல்ல, சட்டமன்றத்திற்கும் நாயகன் நீங்கள்தான்!” “உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி, ஊழலைக்களையெடுத்து மக்களாட்சி என்னும் மரத்தைப் பிடித்து நிற்கும் ‘கோட் சூட் போட்ட விவசாயி’ நீங்கள்!”
விசில் என்பது ஒளியல்ல, அது பாமரர்களின் மொழி… ஊரையெல்லாம் நாற்றமெடுத்த ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் ஒருவரும் இல்லை!. “இனி எப்போதும் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி ஒன்றில் நீங்கள் பேசுவதாக இருக்கும், இல்லை உங்களைப் பற்றிப் பேசுவதாக மட்டும்தான் இருக்கும்!”
இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026: தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்… விவசாயிகள் எதிர்பார்ப்பு என்ன?
‘எண்ட் கார்டு’ போட்ட சபாநாயகர்:
அமைச்சர் பட்ஜெட் உரையின் தொடக்கப் பகுதியை விட்டுவிட்டுத் தொடர்ந்து கவிதைகளையே வாசித்துக்கொண்டிருந்த போது, அவையில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே குறுக்கிட்ட பேரவைத் தலைவர் (சபாநாயகர்), உறுப்பினர்களை அமைதியாக அமருமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அமைச்சரைப் பார்த்து, “வேளாண் நிதிநிலை அறிக்கை என்று தாங்கள் அவை முன் வைத்திருக்கிற அந்த அறிக்கையை மட்டும் விரிவாகப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனக்கூறி, கவிதை உரைக்கு முற்றுப்புள்ளி வைத்துப் பட்ஜெட் உரையை நேரடி வாசிப்பிற்கு எடுத்துச்செல்ல உத்தரவிட்டார்.