பிரபல ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரர் அதிரடி கைது.. கடலூரில் அதிர்ச்சி!!
தங்களிடம் எதுவும் இல்லை என்று கூறி இளைஞர்கள் அங்கிருந்து புறப்பட முயன்ற போது, போலீஸ்காரர் ரஞ்சித் மற்றும் ரவுடி சுபாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து அந்த மூன்று இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த செல்போன்களையும் வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர், ஜுன் 08: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில், பிரபல ரவுடி ஒருவருடன் சேர்ந்து கொண்டு மூன்று இளைஞர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட காவல் நிலைய காவலர் (போலீஸ்காரர்) மற்றும் ரவுடி ஆகிய இருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தின் முழு விபரம் பின்வருமாறு, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் விருத்தாச்சலம் பெரியார் நகர் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.
இதையும் படிக்க : பெரம்பூரில் சூட்கேஸில் சடலம் – இறந்தவரின் அடையாளம் தெரிந்தது – மனைவி கைது
மதுபோதையில் வழிமறிப்பு:
அப்போது, விருத்தாச்சலம் நகர காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் ரஞ்சித் மற்றும் அங்குள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளியான சுபாஷ் ஆகிய இருவரும் மதுபோதையில் அந்த இளைஞர்களின் வாகனத்தை வழிமறித்துள்ளனர். வாகனத்தை நிறுத்திய அவர்கள், இளைஞர்களிடம் மிரட்டிப் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர்கள் தங்ளிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ரஞ்சித்தும் ரவுடி சுபாஷும், “நீங்கள் கஞ்சா பயன்படுத்துகிறீர்கள், உங்களை கஞ்சா வழக்கில் கைது செய்வோம்” என்று கூறி மிரட்டியுள்ளனர்.
இளைஞர்கள் மீது தாக்குதல் – செல்போன் பறிப்பு
தங்களிடம் எதுவும் இல்லை என்று கூறி இளைஞர்கள் அங்கிருந்து புறப்பட முயன்ற போது, போலீஸ்காரர் ரஞ்சித் மற்றும் ரவுடி சுபாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து அந்த மூன்று இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த செல்போன்களையும் வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்பி அதிரடி உத்தரவு – 6 பிரிவுகளில் வழக்கு
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காவலர் ரஞ்சித் எவ்வித அச்சமும் இல்லாமல் ரவுடியுடன் சேர்ந்து இந்த அராஜகத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஜெயகுமார், இருவரையும் உடனடியாகக் கைது செய்ய அதிரடி உத்தரவிட்டார்.
இதையும் படிக்க : நீதிமன்ற வளாகத்திலேயே கொலையா? கோவையில் பிணமாகக் கிடந்த வாலிபர் வழக்கில் அதிரடி திருப்பம்!!
அதன்பேரில், விருத்தாச்சலம் போலீசார் ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட காவலர் ரஞ்சித் மற்றும் ரவுடி சுபாஷ் ஆகிய இருவர் மீதும் 6 கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள காவலர் ரஞ்சித்தைக் பணியிடை நீக்கம் செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் கடலூர் மாவட்ட காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.