மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் விபரீதம்.. நண்பனை கொன்று புதைத்த இரு சிறுவர்கள்.. கோவையில் அதிர வைக்கும் சம்பவம்!
Coimbatore Boy Murder: கோயம்புத்தூர் மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்ற போது, ஏற்பட்ட தகராறில் 13 வயது சிறுவனை கொலை செய்து அங்கேயே குழி தோண்டி புதைத்ததாக சக நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், இருகூர் நியூ காலனி பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா ( 42 வயது). இவரது மகன் திவிஸ் ( 13 வயது). இவர், ஆர். ஜி. புதூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டிருப்பது மாணவன் திவிஸ் கடந்த 15- ஆம் தேதி பிற்பகல் தனது நண்பர்கள் சிலருடன் இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், வெகு நேரமாகியும் சிறுவன் திவிஸ் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவனின் நண்பர்களிடம் விசாரித்துள்ளனர். அதற்கு, ஏதோ ஒரு மர்ம நபருடன் திவிஸ் சென்றதாக மழுப்பலாக கூறியுள்ளனர். இதில், சந்தேகம் அடைந்த பெற்றோர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
நண்பர்களிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை
அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து திவிஸ் உடன் சென்ற சிறுவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த சிறுவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதன் காரணமாக அந்த சிறுவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், சிறுவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், மீன்பிடிக்க சென்ற போது சிறுவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஊட்டி மலர் கண்காட்சிக்கு போறீங்களா? பஸ் டென்ஷன் இனி இல்ல.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!




நண்பனை கொலை செய்து புதைத்த சிறுவர்கள்
அதில், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த இரண்டு சிறுவர்கள் அங்கு கிடந்த காலி மது பாட்டில்கள் மற்றும் கல்லால் சிறுவன் திவிஸ் தலையில் பலமாக தாக்கினர். இதில், மாணவன் திவிஸ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிக்க துடிக்க பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அச்சம் அடைந்த சிறுவர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அந்த பகுதியில் குழி தோண்டி சிறுவன் திவிஸ் உடலை புதைத்தனர். இதை தொடர்ந்து, அந்த சிறுவர்களை சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
புதைக்கப்பட்ட சிறுவன் உடல் மீட்பு
அங்கு, சிறுவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் போலீசார் குழி தோண்டினர். அதில், புதைக்கப்பட்டிருந்த சிறுவன் திவிஸ் உடலை எடுத்து உடல் கூராய்வுக்காக சிங்காநல்லூர் இ. எஸ். ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, சிறுவனை கொலை செய்ததற்காக அவரது நண்பர்களான இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். சக நண்பரை கொலை செய்து புதைத்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: திருச்சி ஐஜி பங்களா எதிரே கொடூரம்.. பேச மறுத்த காதலி மீது கல்லால் கொலை வெறி தாக்குதல்.. காதலன் அதிரடி கைது!