தொடர் அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி சுட்டுப்பிடிப்பு.. தென்காசி அருகே பரபரப்பு!!
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐயப்பனை மீட்ட போலீஸார், உடனடியாக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட்டுள்ளான். இந்த மோதலின் போது காயமடைந்த தனிப்படை காவலர் ஒருவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி, மே 31: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் முகமூடி அணிந்து தொடர் அரிவாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ஒருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் மானூர் உள்ளிட்ட பகுதிகளில், பைக்குகளில் முகமூடி அணிந்து வந்த ஒரு கும்பல் பொதுமக்களைத் தொடர்ச்சியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் ஆலங்குளம் பகுதியில் மட்டும் 6 பேரும், அம்பாசமுத்திரத்தில் ஒருவரும் என பலர் படுகாயமடைந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிக்க: பொது மக்களை அரிவாளால் வெட்டிய கும்பல்.. தென்காசி – நெல்லையில் போலீசார் அதிரடி வேட்டை.. சுட்டு பிடிக்க உத்தரவு?
போலீஸார் நடத்திய அதிரடி வேட்டை:
இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் ஏற்கனவே தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, முதற்கட்டமாக 5 பேரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, ட்ரோன் (Drone) கேமரா காட்சிகள் மூலம் கிடைத்த ஆதாரங்களை வைத்து மேலும் 3 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், இதுவரை மொத்தம் 9 பேர் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர்.
ரவுடி ஐயப்பன் சுட்டுப்பிடிப்பு:
இந்த தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய தென்காசி மாவட்டம் நெட்டூரைச் சேர்ந்த ‘ஐயப்பன்’ என்ற ரவுடி, முக்கூடல் அடுத்த வழக்கறிஞர்புரம் அருகேயுள்ள அரசங்குளம் பகுதியில் மறைந்திருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீஸார், ஐயப்பனை வளைத்துப் பிடிக்க முயன்றனர். அப்போது போலீஸாரைக் கண்ட ஐயப்பன், தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் போலீஸாரை கொடூரமாக தாக்க முற்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், தற்காப்புக்காகவும் தாக்குதலைத் தடுக்கும் வகையிலும் தங்கள் வசம் இருந்த துப்பாக்கியால் ஐயப்பனை நோக்கிச் சுட்டனர். இதில் அவனது வலது கால் முட்டுப் பகுதியில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தான்.
மருத்துவமனையில் அனுமதி:
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐயப்பனை மீட்ட போலீஸார், உடனடியாக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட்டுள்ளான். இந்த மோதலின் போது காயமடைந்த தனிப்படை காவலர் ஒருவரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க : தூத்துக்குடியில் கொடூரம்.. மீனவரை துடிக்க துடிக்க வெட்டி கொலை செய்த 4 பேர் கும்பல்.. மூவரை தட்டி தூக்கிய போலீஸ்!
விசாரணை மற்றும் நேரில் ஆய்வு:
சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிரசன்ன குமார், உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிகிச்சை பெற்று வரும் காவலர் மற்றும் காயமடைந்த குற்றவாளி ஐயப்பனை நேரில் பார்த்து பார்வையிட்டார். போலீஸார் தரப்பில் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுடப்பட்ட ஐயப்பன் மீது ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும், அவன் மீது சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் முக்கிய ரவுடி என்பதும் தெரியவந்துள்ளது. முகமூடி கும்பல் எதற்காக இந்த தொடர் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டது என்ற முழுமையான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.