மரியவில்சனை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.. முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Nainar Nagendran About Maria Wilson : கடந்த திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக் கொண்ட நிதித்துறை அமைச்சர் மரியவில்சனை அமைச்சரவையில் இருந்து நீக்கி முதல்- அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த திமுக ஆட்சியில் தன்னிடம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக, தற்போதைய நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் ஆகும். எனவே, லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் தற்போதைய நிதித்துறை அமைச்சர் ஆகியோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, லஞ்சம் கொடுத்ததை தற்போதைய நிதித்துறை அமைச்சர் மரிய வின்ஸ்டன் சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
சட்டமன்றத்தில் கூறி விளம்பரம் தேடுவது ஏன்
முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். லஞ்சம் கேட்டவர்கள் தொடர்பாக அப்போதும், இப்போதும் எவ்வித புகாரும் அளிக்காமல், இந்த விவகாரத்தை சட்டமன்றத்தில் கூறி விளம்பரம் தேடுவதன் அவசியம் என்ன என்பதை விளக்க வேண்டும். குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து அனுமதி பெறும் வகையில் மரிய வில்சனின் கல்வி நிறுவனத்தில் சட்டரீதியாக என்ன குறைபாடுகள் உள்ளன என்பதை கண்டறிய வேண்டும்.
மேலும் படிக்க: “டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு!”.. சேலம் செல்கிறார் முதல்வர் விஜய்.. பாதுகாப்பு வளையத்தில் மேட்டூர்!!




அரசு எந்திரம் எப்படி நேர்மையாக செயல்படும்
தனது தனிப்பட்ட நலனுக்காக லஞ்சம் கொடுத்து, தனது காரியத்தை முடித்துக்கொள்ளும் குணநலன் உடைய நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனை முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தினால் அரசு எந்திரம் எப்படி நேர்மையாக செயல்படும். எனவே, ஒப்புதல்கள் அல்லது அனுமதிகளை பெற்ற ஒரு அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுத்ததற்கான ஊழல் தடுப்பு சட்ட பிரிவு 8 மற்றும் ஊழல் செயலுக்கு துணை போனதற்கான பிரிவு 12 மற்றும் சட்ட நடைமுறைகளை தவிர்ப்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காக பி. என். எஸ்.- இன் பிரிவு 61 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
அமைச்சரவையிலிருந்து மரியவில்சனை நீக்க வேண்டும்
அதன் அடிப்படையில், சமரசம் இன்றி முறையாக விசாரிக்க வேண்டும். இது தொடர்பான விசாரணை முடிவடையும் வரை, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனை அமைச்சரவையில் இருந்து உடனடியாக முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் நீக்கி உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சென்னைக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. யார் யார் தெரியுமா? முழு விவரம்..