கரூரில் பயங்கரம்.. விவசாயி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.. தீவிர விசாரணையில் போலீஸ்!
Karur District Crime : கரூர் மாவட்டத்தில் விவசாயை மீது மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவருக்கு இடுப்பு பகுதியில் குண்டு பாய்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர் .
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கடவூர், சிவப்பூர் பகுதி வளையப்பட்டியை சேர்ந்தவர் கருணகிரி (48 வயது). விவசாயம் செய்து வரும் இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வளையப்பட்டி பகுதியில் உள்ள களத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு கருணகிரி வயலில் விவசாய பணிகளை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் களத்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள பள்ளத்து பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென நாட்டு துப்பாக்கியால் கருணகிரியை சரமாரியாக சுட்டனர். இந்த சம்பவத்தில், உடலில் குண்டு பாய்ந்த கருணகிரி இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலை குலைந்து கீழே விழுந்தார்.
விவசாயிக்கு இடுப்பு பகுதியில் குண்டுகள் பாய்ந்தன
மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் கருணகிரிக்கு இடுப்பு பகுதியில் சுமார் 10 இடங்களில் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்தன. இதில் அவருக்கு, ரத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி சென்று கருணகிரியை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி பலி.. விளக்கம் கேட்ட சக மாணவிகளுக்கு மிரட்டல்.. களத்திற்கு வந்த அமைச்சர்!!




தீவிர சிகிச்சை பிரிவில் விவசாயி அனுமதி
அங்கு, அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், அவருக்கு இடுப்பின் பின் பகுதியில் பால்ரஸ் குண்டுகள் துளையிட்டு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவதற்காக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, கருணகிரியின் மனைவி அளித்த புகாரின் பேரில், பால விடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை
மேலும், விவசாயி கருணகிரி மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் ஏதேனும் முன் விரோதம் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் போலீசார் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கரூரில் கிராமப் பகுதியில் விவசாயி மீது மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கோவை சிறுமி கொலை வழக்கு.. கைதானவருக்கு மே 27 வரை சிறை.. தப்பியோடிய நபருக்கு கால் முறிவு!!